தொடர் மின் நிறுத்தம் பொதுமக்கள் அவதி

தொடர் மின் நிறுத்தம் பொதுமக்கள் அவதி
குமாரபாளையத்தில் தொடர் மின் நிறுத்தம் செய்து வருவதால் பொதுமக்கள் அவதிகுள்ளாகி வருகிறார்கள்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் மற்றும் சுற்றுப்புற பகுதியில் நேற்றுமுன்தினம் மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்வதற்காக காலை 09:00மணி முதல் மாலை 05:00 மணிவரை மின் நிறுத்தம் செய்யப்பட்டது. ஆனால் இரவு 08:40 மணியளவில்தான் மின் இணைப்பு கொடுக்கப்பட்டது. இதனால் விசைத்தறி, கைத்தறி, ஸ்பின்னிங், டபுளிங், உள்ளிட்ட பல்வேறு தொழில் நிறுவனங்கள், பாதிப்புக்குள்ளானது. குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் அவதிக்கு ஆளாகினர். பால் விற்கும் கடைகளில் குளிர்சாதன பெட்டியில் வைக்கப்படும் பால் பாக்கெட்டுக்கள், 12 மணி நேரம் மின்சாரம் இல்லாததால், பால் கெடும் நிலை ஏற்படுமோ? என அச்சத்துடன் இருந்தனர். இந்நிலையில் பராமரிப்பு பணிகள் இரண்டாவது நாளாக நேற்றும் சில பகுதிகளில் தொடர்ந்தது. காலை 07:00 மணியளவில் துண்டிக்கப்பட்ட மின்சாரம், காலை 11:00 மணியளவிலும், மீண்டும் மாலை 03:00 மணியளவில் துண்டிக்கபட்ட மின்சாரம் மாலை 05:40 மணிக்கும் கொடுக்கப்பட்டது. இதனால் குமாரபாளையத்தில் உள்ள பொதுமக்கள் வாட்ஸ்அப் மூலமாக மின்வாரியத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். இது குறித்து மின்வாரிய உதவி இயக்குனர் வல்லப்ப தாஸ் கூறியதாவது: மின்பராமரிப்பு செய்யப்படும் பகுதிகளில் உள்ள மின் நுகர்வோர்களுக்கு முன்கூட்டி மொபைல் போன்கள் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்ட பின்தான், பராமரிப்பு பணிகள் செய்யப்படுகிறது. இது புரியாமல், வாட்ஸ்அப் குரூப்களில் மின்வாரியம் பற்றி தவறான தகவல்கள் பகிர்ந்து வருகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
Next Story