பயன்பாடற்ற நிலையில் உள்ள சிறுவர் விளையாட்டு பூங்கா
Maduranthakam King 24x7 |14 Aug 2024 4:54 AM GMT
அச்சிறுப்பாக்கம் அருகே பல லட்சம் செலவில் அமைக்கப்பட்ட சிறுவர் விளையாட்டு பூங்கா பொதுமக்களுக்கு பயன்படாமலேயே வீணாகி வருகிறது.
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த அச்சிறுப்பாக்கம் பேரூராட்சி 5 -வது வார்டில் அமைந்துள்ளது ராவத்தநல்லூர். இங்குள்ள குடியிருப்பு மத்தியில் ரூபாய் 32 லட்சம் மதிப்பில் சுமார் 30 செண்ட் பரப்பளவில் சிறுவர் விளையாட்டு பூங்கா அமைந்துள்ளது. இந்த விளையாட்டு பூங்கா கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட நிலையில் இன்றுவரையில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட வில்லை. இது ஒருபுறமிருக்க பூங்காக்குள் அமைக்கப்பட்ட விளையாட்டு சாதனங்கள், நடைபாதைகள் தரமற்ற நிலையில் இருப்பதோடு மழை பெய்தால் மழைநீர் வெளியேற வழிவகை கூட செய்யப்படாமல் உள்ளது. இதனால் கடந்த இரண்டு தினங்களுக்கு முன் பெய்த மழையின் போது மழைநீர் பூங்கா வளாகம் முழுவதும் தேங்கி குளம் போல் காட்சியளிக்கிறது. பூங்கா பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வராமலேயே விணாவதோடு அரசு பணம் வீணாக்கப்படுவது பொது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எனவே இந்த பூங்காவை மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story