கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட இருவருக்கு தலா இரண்டு ஆண்டுகள் சிறை!
Pudukkottai King 24x7 |15 Aug 2024 1:18 PM GMT
அரசு செய்திகள்
புதுக்கோட்டை அறந்தாங்கி பகுதியில் கடந்த 2015ஆம் ஆண்டு கஞ்சா கடத்திய 2 பேருக்கு, தலா 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து புதுக்கோட்டை நீதிமன்றம் தீர்ப்பளித்தது. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதியில் போதைப் பொருள் கடத்துவதாக 2015 மார்ச் மாதம், சிவகங்கை போதைப் பொருள் கடத்தல் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதைத் தொடர்ந்து அறந்தாங்கி பேருந்து நிலையம் அருகில் போலீஸார் சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது அந்த வழியே மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை நிறுத்தி சோதனை செய்ததில் அவர்களிடம் 5 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இதுதொடர்பாக அறந்தாங்கி எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த முருகன் (66) மற்றும் தஞ்சை சாலியகுளக்கரை புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த மணிகண்டன் (30) ஆகிய இருவரையும் கைது செய்தனர். இந்த வழக்கு, புதுக்கோட்டை அத்தியாவசியப் பண்டங்கள் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணையின் முடிவில் நீதி ஏ.கே.பாபுலால் புதன்கிழமை தீர்ப்பளித்தார்.கஞ்சா கடத்திய குற்றத்துக்காக இரண்டு பேருக்கும் தலா 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் தலா ரூ.5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.
Next Story