பள்ளி மாணவர்களுக்கு ஆளுமை பயிற்சி முகாம்

பள்ளி மாணவர்களுக்கு ஆளுமை பயிற்சி முகாம்
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் நிகில் பவுண்டேஷனின் ஆளுமை பயிற்சி முகாம் நடைபெற்றது.
இந்தியாவின் பல முக்கியமான துறைகளில், தலைசிறந்த ஆளுமைகளாக அரசு பள்ளி மாணவர்களே இருக்கின்றனர். இந்த சாதனை மேலும் தொடர வேண்டும் என்கிற நோக்கத்தோடு, மாணவர்களுக்கு ஆளுமை பயிற்சி முகாம்களை நிகில் பவுண்டேஷன் நடத்தி வருகிறது. அந்த வகையில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில், ஆளுமை பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில், ஆசிரியை முத்துமீனாள் வரவேற்றார். பள்ளி தலைமையாசிரியர் சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். மதுரை நிகில் பவுண்டேஷனின் பயிற்சியாளர்கள் துரை கணேசன் மற்றும் பாண்டியராஜன் ஆகியோர் மாணவர்களிடம் பேசுகையில், "நேர்மை, அன்பு, பணிவு, இவை மூன்றும் இருந்தால் பாராட்டு தானாக கிடைக்கும். சிறு உதவி செய்தாலும் நாம் பாராட்டு தெரிவிக்க வேண்டும். அம்மா அப்பாவை எப்பொழுதுமே பாராட்ட வேண்டும். ஆசிரியர்கள் நடத்தும் பாடத்தை நாம் கவனித்தால் 30% நமக்குள் அந்த தகவல் போய் சேரும். வீட்டில் சென்று படித்தால் 30% மீண்டும் நம்முள் சேரும். அதனை எழுதிப் பார்த்தால் 60 சதவிகிதம் நம்முள் சென்று சேரும். வீட்டைச் சுற்றியும், நம்மைச் சுற்றியும் என்ன நடக்கிறது என்பதை தொடர்ந்து கவனிக்க வேண்டும். பள்ளியில் படிக்கும் பாடங்களை நன்றாக கவனித்தால் டியூசன் தேவையில்லை. ஆர்வமும், பயிற்சியும் இருந்தால் எண்ணம், செயல், சொல் சிறப்பாக இருக்கும். நமக்குள் எண்ணங்கள் 60 ஆயிரம் உண்டு. எனவே நம்முடைய வாழ்க்கையில் நாம் நன்றி பாராட்டுதலையும், கவனித்தலையும் மேற்கொண்டால் வெற்றி எளிதாகக் கிடைக்கும்" என பயிற்சியாளர்கள் பாராட்டுதல், கவனித்தல் தொடர்பாக விரிவாக விளக்கினார். இறுதியாக ஆசிரியை முத்துலட்சுமி நன்றி கூறினார். பயிற்சியில் ஏராளமான பெற்றோர்களும் பங்குபெற்றனர்.
Next Story