ஆட்கள் பற்றாக்குறை, மெசின் நடவைக்கு மாறிய விவசாயிகள்

ஆட்கள் பற்றாக்குறை, மெசின் நடவைக்கு மாறிய விவசாயிகள்
குமாரபாளையம் அருகே ஆட்கள் பற்றாக்குறை காரணமாக விவசாயிகள் மெசின் நடவைக்கு மாறி வருகின்றனர்.
மேட்டூர் கிழக்குக்கரை வாய்க்காலில் ஆக. 1 முதல் தண்ணீர் திறந்து விட்டதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்து வருகின்றனர். இதனால் உழுது பயிர் சாகுபடி செய்ய தயாராகி வருகின்றனர். நாற்றுகளை நடுவதற்கு கூலி ஆட்கள் மூலம் நடவு பணிகள் செய்து வந்தனர். ஆனால் தற்போது ஆட்கள் பற்றாக்குறை காரணமாக மெசின் நடவடிக்கைக்கு மாறி வருகின்றனர். இதனால் பாய் நாற்றங்கால் விட்டு வருகிறார்கள். இது குறித்து விவசாயியும், ஒன்றிய கவுன்சிலருமான தனசேகரன் கூறியதாவது: முன்பு போல் நாற்று நடவுக்கு, பயிர் அறுவடை செய்வதற்கு ஆட்கள் அதிக அளவில் இல்லாத நிலை ஏற்படுகிறது. முன்னோர்கள் செய்த இந்த பணிகளை, இளம்தலைமுறையினர் செய்ய தயக்கம் காட்டி வருகின்றனர். காரணம், கல்லூரி படிப்பு, உயர் கல்வி என செல்வதால், அவர்களால் இது போன்ற பணிகள் செய்ய முடியாதநிலை ஏற்படுகிறது. இதனால் நாற்று நடவிற்கும், அறுவடைக்கும் மெசின்கள் வந்து விட்டதால், விவசாயிகளுக்கு மிகுந்த பயனுள்ளதாக உள்ளது. மேலும், இது போன்ற நாற்று நடவு செய்யும் மெசின் உரிமையாளர்கள், அறுவடை செய்யும் மெசின் உரிமையாளர்களை போனில், அல்லது நேரில் பிடிப்பது மிகவும் கஷ்டமானதாக உள்ளது. வேளாண்மைத்துறை சார்பில் பல்வேறு உபகரணங்கள் வழங்கி உதவுவது போல், நாற்று நடவு இயந்திரங்கள், அறுவடை இயந்திரங்கள் ஆகியவற்றை அரசு சார்பில் வாடைகைக்கு விட்டால் விவசாயிகளுக்கு மேலும் பயனுள்ளதாக அமையும். இவ்வாறு அவர் கூறினார்.
Next Story