சாய்ந்த நிலையில் மின்கம்பங்கள் அச்சத்தில் விவசாயிகள்

X
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை புது பஸ் ஸ்டாண்ட் அருகே ஆனந்தவல்லி அம்மன் நகர் பின்புறம் 100 ஏக்கருக்கும் மேல் உள்ள வயல்களில் விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். வயல் வழியாக செல்லும் மின்கம்பங்கள் ஆங்காங்கே சாய்ந்த நிலையில் உள்ளதால் மின் கம்பிகளும் தாழ்வாக தொங்கி வருகின்றன. கால்நடைகளை மேய்ப்பவர்கள், விவசாயிகள் சிரமப்படுகின்றனர். இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது விவசாய நிலங்களில் செயல்படும் பம்பு செட்டுகளுக்கு வரும் உயரழுத்த மின்கம்பிகளை தாங்கியுள்ள மின்கம்பங்கள் பல ஆண்டுகளாகி விட்டதால் சாய்ந்த நிலையில் உள்ளன. மின் கம்பிகளும் மிகவும் தாழ்வாக தொங்குகின்றன. விவசாய காலங்களில் டிராக்டர்கள், கதிர் அறுக்கும் இயந்திரங்களைக் கொண்டு செல்ல முடியாததால் அவதிக்குள்ளாகி வருகிறோம். மின்வாரிய அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிவித்தனர். விவசாயிகளின் நலன் கருதி விபத்து ஏற்படுவதற்கு முன் மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென எதிர்பார்க்கின்றனர்.
Next Story

