டேங்கர் லாரி மோதி வாழைக்காய் வியாபாரி சம்பவ இடத்திலேயே பலி

குளித்தலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை
திருச்சி மாவட்டம் அலகரையை சேர்ந்தவர் முருகானந்தம் (36). இவர் தற்போது கரூர் மாவட்டம் குளித்தலை அருகே நடுவதியத்தில் தனது குடும்பத்துடன் தங்கி வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இன்று தனது டூவீலரில் வாழைக்காய் லோடு ஏற்றிக்கொண்டு பழைய திருச்சி - கரூர் சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக கரூர் நோக்கி வந்த டேங்கர் லாரி அவர் மீது மோதாமல் இருக்க திடீரென பிரேக் பிடித்த போது லாரியின் முன் சக்கரம் ஆக்சில் கழன்றது. இதனால் முருகானந்தம் லாரி அடியில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்த குளித்தலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கிரேன் உதவியுடன் லாரியின் அடியில் சிக்கிய முருகானந்தத்தின் உடலை மீட்டு குளித்தலை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து முருகானந்தம் சகோதரர் முத்து செல்வம் அளித்த புகாரின் பேரில் லாரி ஓட்டுனரான ராணிப்பேட்டையை சேர்ந்த கமலக்கண்ணன் என்பவர் மீது குளித்தலை போலீசார் இன்று வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story