மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தில் புகுந்த சாரைப் பாம்பு : பரபரப்பு

மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தில் 6 அடி சாரை பாம்பு புகுந்ததால் பணியில் இருந்த அரசு ஊழியர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்துள்ளனர். இதனால் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
திருவள்ளூர் / மாவட்டம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தில் 6 அடி சாரை பாம்பு புகுந்ததால் பணியில் இருந்த அரசு ஊழியர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்துள்ளனர். இதனால் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகம், சமூக நலத்துறை அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தின் உள்ளே திடீரென சாரை பாம்பு ஒன்று உள்ளே புகுந்துள்ளது. இதனை கண்ட ஊழியர்கள் அலறி அடித்துக் கொண்டு கூச்சலிட்டனர். உடனடியாக, திருவள்ளூர் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருவள்ளூர் தீயணைப்புத்துறை வீரர்கள், மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலகத்திற்குள் நுழைந்த 6 அடி நீளமுள்ள சாரை பாம்பை லாவகமாக பிடித்து பூண்டி காப்புக்காட்டில் விட எடுத்துச் சென்றனர். தீயணைப்பு துறையினர் பிடித்த பிறகுதான் தெரிந்தது, அது 6 அடி நீளம் உள்ள சாரை பாம்பு என தெரியவந்தது. அலுவலகத்திற்குள் நுழைந்த பாம்பு பிடிக்கப்பட்டது என்ற செய்தியை கேட்ட பிறகுதான் அலுவலக ஊழியர்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டு பின்னர் பணிக்கு சென்றனர். மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தில் 6 அடி சாரைப்பாம்பு புகுந்த சம்பவம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story