மருதாநதி அணையிலிருந்து முதல்போக சாகுபடிக்காக தண்ணீரை திறப்பு

மருதாநதி அணையிலிருந்து முதல்போக சாகுபடிக்காக தண்ணீரை திறப்பு
ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி, விவசாயிகள் பயன்பறும் வகையில் மருதாநதி அணையில் இருந்து முதல்போக சாகுபடிக்காக தண்ணீரை திறந்து வைத்தார்.
ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி, திண்டுக்கல் மாவட்டம், ஆத்துார் ஊராட்சி ஒன்றியம், அய்யம்பாளையத்தில் மருதா நதி அணையில் இருந்து விவசாயிகள் பயன்பெறும் வகையில் முதல்போக சாகுபடி பாசனத்திற்காக தண்ணீரை, மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி தலைமையில், திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம் முன்னிலையில் இன்று(20.09.2024) திறந்து வைத்தார். அணையிலிருந்து தண்ணீரை திறந்து வைத்து, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் தெரிவித்ததாவது:- தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க, திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் வட்டம், அய்யம்பாளையம் கிராமம், மருதாநதி நீர்த்தேக்கத்திலிருந்து இன்று(20.09.2024) முதல் 120 நாட்களுக்கு பழைய ஆயக்கட்டிற்கு நாள் ஒன்றுக்கு விநாடிக்கு 20 கன அடியும், முதல் 30 நாட்களுக்கு மறைமுக மற்றும் புதிய ஆயக்கட்டிற்கு நாள் ஒன்றுக்கு விநாடிக்கு 70 கன அடியும் ஆக மொத்தம் நாளொன்றிற்கு விநாடிக்கு 90 கன அடிக்கு மிகாமலும் என்ற வகையில் விவசாயிகளின் பயன்பாட்டிற்காக இன்று தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதன்மூலம், திண்டுக்கல் மாவட்டத்தில் ஆத்துார் வட்டத்தில் அய்யம்பாளையம், சித்தரேவு, தேவரப்பன்பட்டி ஆகிய பகுதிகளில் 5943 ஏக்கர் நிலங்களும், நிலக்கோட்டை வட்டத்தில் சேவுகம்பட்டி. கோம்பைபட்டி ஆகிய பகுதிகளில் 640 ஏக்கர் விவசாய நிலங்களும் என மொத்தம் 6,583 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் என ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பாஸ்கரன், திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் சக்திவேல், அய்யம்பாளையம் பேரூராட்சித்தலைவர் ரேகா ஐயப்பன், மஞ்சளாறு வடிநில கோட்ட செயற்பொறியாளர் சரவணன், உதவி செயற்பொறியாளர் செல்வம், உதவி பொறியாளர், விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
Next Story