வெட்டுக்காட்டுவலசில் குடும்பத் தகராறில் மாமியாரை கொன்ற மருமகள் கைது.
Karur King 24x7 |21 Sep 2024 3:12 AM GMT
வெட்டுக்காட்டுவலசில் குடும்பத் தகராறில் மாமியாரை கொன்ற மருமகள் கைது.
வெட்டுக்காட்டுவலசில் குடும்பத் தகராறில் மாமியாரை கொன்ற மருமகள் கைது. கரூர் மாவட்டம், தென்னிலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, கோடந்தூர் ஊராட்சியில் உள்ள வெட்டுக்காட்டு வலசு பகுதியைச் சேர்ந்தவர் லோகநாதன் வயது 52. இவரது மனைவி விஜயலட்சுமி வயது 45. இவர்களுக்கு ரஞ்சித்குமார், பவதாரணி என்ற மகனும் மகளும் உள்ளனர். இந்நிலையில் லோகநாதனுக்கும் விஜயலட்சுமிக்கு ஏற்பட்ட குடும்பத்த தகராறில் விஜயலட்சுமி திருப்பூரில் உள்ள அவரது தாயார் வீட்டில் தனியாக வசித்து வந்தார். அவ்வப்போது தனது மகன் மற்றும் மகளைப் பார்ப்பதற்காக வெட்டுக்காட்டு வலசுக்கு வந்து செல்வது வழக்கம். இதேபோல செப்டம்பர் 18ஆம் தேதி விஜயலட்சுமி தனது மகன் மகளை பார்ப்பதற்காக வெட்டுக்காடுவலசுக்கு வந்துள்ளார். மறுநாள் செப்டம்பர் 19ஆம் தேதி லோகநாதனின் தாய் பாப்பாத்தியை அழைத்துக்கொண்டு அப்பகுதில் உள்ள காட்டுப் பகுதிக்கு ஆடு மேய்க்க அழைத்து சென்றுள்ளார். ஆடு மேய்த்துக் கொண்டிருக்கும்போது பாப்பாத்தியும், விஜயலட்சுமியும் பேசிக் கொண்டிருக்கும்போது, கணவனை பிரிந்து வாழ்வது தொடர்பான விவகாரத்தில், ஒரு கட்டத்தில் கோபமடைந்த விஜயலட்சுமி பாப்பாத்தி தலை மீது கல்லை தூக்கி போட்டு கொலை செய்துள்ளார். இந்த சம்பவத்தை பின்னர் அறிந்த விஜயலட்சுமியின் கணவர் லோகநாதன், இது தொடர்பாக காவல்துறையினருக்கு அளித்த புகாரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் உயிரிழந்த பாப்பாத்தியின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்க்கான் அப்துல்லா சம்பவ இடத்தில் ஆய்வு செய்தார். பின்னர் அவரது உத்தரவின் பேரில் விஜயலட்சுமியை கைது செய்து, அவர் மீது வழக்கு பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். குடும்பத் தகராறில் மாமியாரை மருமகள் கொன்ற விவகாரம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story