மர்மமான முறையில் இளைஞர் உயிரிழந்த சம்பவத்தில் உறவினர்கள் சாலை மறியல்
Pudukkottai King 24x7 |24 Sep 2024 10:43 AM GMT
போராட்டச் செய்தி
புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் அருகே மர்மமான முறையில் இளைஞர் உயிரிழந்த சம்பவத்தில் குற்றவாளியை விரைந்து கைது செய்யக்கோரி அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் அருகேயுள்ள தோப்புக்கொல்லையைச் சேர்ந்தவர் வி. சுதாகரன் (27). தனியார் நிறுவன ஊழியர். இவரது நண்பரான கோவில்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் விக்னேஷ். இருவரும் கடந்த வாரம் இருசக்கர வாகனத்தில்சென்றனராம். மறுநாள், தோப்புக்கொல்லை அருகேயுள்ள பாலம் அருகே சுதாகரன் பலத்த காயங்களுடன் உயிரிழந்து கிடந்தார். இதுகுறித்து வல்லத்திராகோட்டை போலீஸார் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், சுதாகரை விக்னேஷ்தான் அழைத்துச்சென்று, அடித்துக் கொலை செய்துவிட்டு சென்றுள்ளதாகவும், விக்னேஷை கைது செய்ய வேண்டும் எனவும் சுதாகரன் தரப்பினர் வலியுறுத்தி வந்துள்ளனர். இதுவரை போலீஸார் எவ்விதநடவடிக்கையும் எடுக்கவில்லையாம். இதைக் கண்டித்தும், விக்னேஷை உடனே கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் சுகாகரன் உறவினர்கள் தோப்புக்கொல்லை பேருந்து நிறுத்தம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.தொடர்ந்து அங்கு சென்ற வல்லத்திராகோட்டை போலீஸார் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. சாலை மறியல் போராட்டத்தினால் புதுக்கோட்டை, ஆலங்குடி சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது
Next Story