குமரியில் சித்த வர்ம பல்நோக்கு உறைவிட மருத்துவமனை
Nagercoil King 24x7 |25 Sep 2024 4:03 AM GMT
அமைச்சர் ஆய்வு
குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக சிறு கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா தலைமையில் பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ், இன்று (24.09.2024) சித்த வர்ம பல்நோக்கு உறைவிட மருத்துவமனை அமைப்பது குறித்து மருத்துவ வல்லுநர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்களுடன் கலந்தாய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில் – நமது கன்னியாகுமரி மாவட்டத்தை பொருத்தவரை அரிய வகை மருத்துவ குணமுடைய மூலிகைகள் நிறைந்த மாவட்டமாகும். சித்த மருத்துவத்தில் வர்மக்கலை என்பது முக்கியமான ஒன்றாகும். நம்முடைய முன்னோர்கள் சித்த மருத்துவத்தையும், வர்மகலையையும் பயன்படுத்தி சித்த வர்ம மருத்துவத்தில் உலகில் மிகப்பெரிய சாதனை புரிந்துள்ளார்கள். இந்த மருத்துவ முறையினை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் விதமாக மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகத்துடன் இணைந்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான அரசு கன்னியாகுமரி மாவட்டத்தில் சித்த வர்ம பல்நோக்கு மருத்துவமனை அமைப்பதற்காக நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கு அறிவுறுத்தியதன் அடிப்படையில் பல்வேறு இடங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டுள்ளோம். இறுதி அறிக்கையினை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நம்முடைய முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று அதற்கான உரிய வழிகாட்டுதல்கள் பெற்று பணிகள் துவங்கப்படும். சித்த வர்ம பல்நோக்கு உறைவிட மருத்துவமனை அமையவுள்ள வளாகத்தில் களரி பயிற்சிக்கான தனி ஆராய்ச்சி மையமும் தொடங்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். என கூறினார்.
Next Story