தனியார் வங்கி ஏ.டி.எம்.உடைப்பு அஸ்சாம் இளைஞர் கைது

தனியார் வங்கி ஏ.டி.எம்.உடைப்பு அஸ்சாம் இளைஞர் கைது
குளச்சலில்
குமரி மாவட்டம் குளச்சல் பீச் சந்திப்பில் கடையின் முன் பகுதியில் தனியார்  வங்கி ஏ.டி.எம்.மையம் அமைக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை இந்த ஏ.டி.எம்.மையத்திற்குள் இளைஞர் ஒருவர் புகுந்தார். அவர் ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி பணம் எடுக்காமல் நீண்ட நேரமாக உள்ளே இருந்தார். பின்னர் இளைஞர் ஏ.டி.எம். மெஷினை உடைத்து பணம் கொள்ளையடிக்கும் முயற்சியில் ஈடுப்பட்டார்.       இதை அந்த வழியாக காரில் சென்ற ஒரு நபர் அருகில் உள்ள ஆங்கில மருந்து கடையில் இருந்தவருக்கு தகவல் கூறினார். மருந்து கடைக்காரர் குளச்சல் ஏ.எஸ்.பி.யின் முன்னாள் 'கன் மேன்' விஜயகுமாருக்கு  தகவல் பரிமாறினார். அவர் உடனே குளச்சல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அதற்குள் இளைஞர் தப்பி அப்பகுதியில் உள்ள ஒரு ஐஸ் கம்பெனிக்குள் புகுந்து ஒளிந்து கொண்டார்.      அப்பகுதி முழுவதும் தேடுதல் வேட்டை நடத்திய போலீசார் ஐஸ் கம்பெனிக்குள் சென்று அந்த இளைஞரை பிடித்து காவல் நிலையம் கொண்டு வந்தனர்.  விசாரணையில் இளைஞர் அஸ்சாம் மாநிலம் நரயன்புர் நல்பரி பகுதியை சேர்ந்த பகர்தீன் அலி மகன் சம்சுல் அலி(22) என்பது தெரிய வந்தது.தொடர்ந்து நடத்திய விசாரணையில் சம்சுல் அலி கடந்த 4 நாட்களுக்கு முன்பு சின்ன முட்டம் துறைமுகத்தில் வேலைக்கு வந்தவர் நேற்று குளச்சல் துறைமுகத்தில் வேலை பார்க்கும் உறவினர் ஒருவரை பார்க்க வந்ததாகவும்,உறவினருடன் சண்டைப்போட்டு அறையை விட்டு வெளியே வந்தவர் ஏ.டி.எம்.மையத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சித்தது தெரிய வந்தது. இதையடுத்து குளச்சல் போலீசார் இளைஞரை கைது செய்தனர்.
Next Story