மகளைக் கிண்டல் செய்ததைத் தட்டிக் கேட்ட தந்தை கத்தியால் குத்திப் படுகொலை!

மகளைக் கிண்டல் செய்ததைத் தட்டிக் கேட்ட தந்தை கத்தியால் குத்திப் படுகொலை!
குற்றச்செய்திகள்
திருமயம் அருகே மகளைக் கிண்டல் செய்ததைத் தட்டிக் கேட்ட தந்தை கத்தியால் குத்திப் படுகொலை செய்யப்பட்டார். புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள வீராணம்பட்டியைச் சேர்ந்தவர் கருப்பையா மகன் பொப்பன் என்ற சின்னராஜ் (48). அதே பகுதியைச் சேர்ந்த இவரது உறவினர் ராஜ பெருமாள் மகன் சண்முகம் என்ற முருகேசன் (21). இந்நிலையில் தனது மகளை முருகேசன் கிண்டல் செய்ததையறிந்த பொப்பன் ஞாயிற்றுக்கிழமை மாலை வீராணம்பட்டி விலக்கு சாலையில் உள்ள டீக்கடை அருகே முருகேசனை அழைத்துக் கண்டித்துள்ளார்.அப்போது இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு நடந்ததாகத் தெரிகிறது. இதில் ஆத்திரமடைந்த முருகேசன் வீட்டுக்குச் சென்று கத்தியை எடுத்து வந்து பொப்பனைக் குத்தினார். இதில் படுகாயம் அடைந்த அவர் திருமயம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். தகவலறிந்து சென்ற போலீஸார் முருகேசனைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Next Story