அலங்காநல்லூர் அருகே கோவில் பாப்பாகுடியில் பெயிண்டர் குத்திக் கொலை போலீசார் விசாரணை

அலங்காநல்லூர் அருகே கோவில் பாப்பாகுடியில் பெயிண்டர் குத்திக் கொலை போலீசார் விசாரணை
கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை அலங்காநல்லூர் அருகே கொலை வழக்கில் கைதாகி ஜாமினில் வந்தவர் மதுபோதையில் தந்தையிடம் தகராறில் ஈடுபட்ட போது தடுக்கச் சென்ற பெயிண்டரை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள கோவில் பாப்பாகுடி கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பண்ணன் மகன் நாகமுத்து வயது(36).அப்பகுதியில் பெயிண்டராக பணி செய்து வரும் இவர் நேற்று இரவு அதே பகுதியில் வெட்டி கொலை செய்யப்பட்டு முகம் மட்டும் எரிந்த நிலையில் பிணமாக கிடந்தார். இது தொடர்பாக கிடைத்த தகவலின் பேரில் சம்பவ இடம் சென்ற அலங்காநல்லூர் போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கொலை சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த வெண்மணி என்பவரின் மகனான ஹரிஹரன் என்ற கோழிகறி வயது (18) என்பவர் ஈடுபட்டது தெரிய வந்தது. மேலும் நடைபெற்ற தொடர் விசாரணையில் ஹரிகரன் என்ற கோழிக்கறி தனது 17வயதிலேயே கடந்த ஆறாவது மாதம் சமயநல்லூர் அருகே அம்பலத்தடி கிராமத்தில் அரவிந்தன் என்ற வாலிபரை கொலை செய்த வழக்கில் கைதாகி சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டுள்ளார். பின் கடந்த சில தினங்கள் முன்பு ஜாமினில் வெளிவந்த நிலையில் ஹரிகரனுக்கும் அவரது அப்பா வெண்மணிக்கும் நேற்று இரவு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.அப்போது அங்கிருந்த நாகமுத்து இருவரையும் விலக்கிவிட்டு ஹரிகரனை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஹரிகரன் நாகமுத்துவை அவரது வீட்டின் அருகே வைத்து கழுத்தில் வெட்டி அவர் முகத்தில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொலை செய்துள்ளார். இந்த சம்பவத்தில் தற்போது ஹரிஹரன் என்ற கோழிக்கறிக்கு 18 வயதானதால் போலீசார் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story