நடுக்கடலில் படகுகள் மீது சரக்கு கப்பல் மோதி வலைகள் சேதம்!

நடுக்கடலில் படகுகள் மீது சரக்கு கப்பல் மோதி வலைகள் சேதம்!
நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 2 படகுகள் மீது சரக்கு கப்பல் மோதி ரூ.3 லட்சம் மதிப்பிலான வலைகள் சேதம் அடைந்துள்ளதாக பாதிக்கப்பட்ட மீனவர்கள் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயல் மீனவ கிராமத்தைச் சேர்ந்த சகாயராஜ் மற்றும் ஜெனிஸ்டன் ஆகிய இரண்டு மீனவர்கள் தங்களது இரண்டு பைபர் படகில் 13 மீனவர்களுடன் புன்ன காயல் கடற்பகுதியில் இருந்து 5 நாட்டிகல் கடல் மைல் தொலைவில் ஆழ் கடலில் கடந்த அக்டோபர் இரண்டாம் தேதி அதிகாலை மீன்பிடித்து கொண்டு இருந்தனர். அப்போது மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்யும் பகுதியில் அத்துமீறி நுழைந்த மாலத்தீவில் சரக்கை இறக்கிவிட்டு தூத்துக்குடி துறைமுகம் நோக்கி சென்ற முத்தா ரீகல் முத்தா மேக்கல் என்ற பார்ச் எனப்படும் சிறிய வகையிலான இரண்டு சரக்கு கப்பல்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்த 2 பைபர் படகுகள் மீது மோதியுள்ளது. இதில் அதிர்ஷ்டவசமாக படகில் இருந்த மீனவர்கள் உயிர் தப்பியுள்ளனர். ஆனால் சரக்கு கப்பல் கடலில் வீசியிருந்த ரூ.3 லட்சம் மதிப்பிலான வலைகளையும் கிளித்துவிட்டு சேதப்படுத்தி நிற்காமல் சென்று விட்டது. இதில் உயிர் தப்பிய 13 மீனவர்களும் பின்னர் புன்னகாயல் ஊர் திரும்பி இது சம்பந்தமாக ஊர் கமிட்டியிடம் தகவல் தெரிவித்தனர். இதை அடுத்து பாதிக்கப்பட்ட மீனவர்கள் மற்றும் ஊர் கமிட்டியினர் இன்று சரக்கு கப்பல் கிழித்த வலைகளுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வந்து வலைகளை கிழித்த கப்பல் நிறுவனம் மீது வழக்கு பதிவு செய்து தங்களுக்கு உரிய இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். ஏற்கனவே கடந்த மாதம் 20ஆம் தேதி இவ்வாறு ஒரு கப்பல் வலைகளை கிழித்து மீனவர்களின் வலைகள் சேதமானது தற்போது மீண்டும் இவ்வாறு மீனவர்கள் மீன்பிடிக்கும் பகுதியில் கப்பல் நுழைந்து வலைகளை சேதப்படுத்துவது வாடிக்கையாகி வருகிறது. இதற்கு மீன்வளத்துறை மற்றும் துறைமுக நிர்வாகம் கடலோர காவல் நிலைய போலீசார் உரிய நடவடிக்கை எடுத்து மீனவர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
Next Story