பரமத்தி அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் மூதாட்டி பலி

பரமத்தி அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் மூதாட்டி பலி
பரமத்தி அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் மூதாட்டி சிகிச்சை பலனின்றி பலியானார்.
பரமத்திவேலூர், அக்.5- நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் தாலுகா, பரமத்தி அருகே மோட்டார் சைக்கிள் மீது ஸ்கூட்டர் மோதிய விபத்தில் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து சென்ற மூதாட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பரமத்திவேலூர் தாலுகா, பரமத்தி அருகே உள்ள மாதேசம்பாளையத்தை சேர்ந்தவர் ராமசாமி (லேட்). இவரது மனைவி ரங்கம்மாள்(62). இவர் கடந்த 29- ஆம் தேதி தனது பேரன் பூவரசனின்(18) மோட்டார் சைக்கிளில் பரமத்தி வந்துள்ளார். பின்னர் மீண்டும் வீட்டிற்கு செல்ல பூவரசனின் மோட்டார் சைக்கிள் பின்னால் அமர்ந்து பரமத்தி‌யில் இருந்து திருச்செங்கோடு சாலையில் சென்று கொண்டிருந்தார். பரமத்தி அருகே உள்ள  மாவுரெட்டி பகுதியில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த ஸ்கூட்டர் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியுள்ளது‌. இதில் மோட்டார் சைக்கிள் பின்னால் அமர்ந்து சென்ற மூதாட்டி ரங்கம்மாள் எதிர்பாராத விதமாக கீழே விழுந்ததில் அவருக்கு தலையில் பலத்த அடிபட்டு படுகாயம் அடைந்தார். இதை பார்த்த அவ்வழியாக வந்தவர்கள் ரங்கம்மாளை காப்பாற்றி நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ரங்கம்மாள் நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) உயிரிழந்தார். விபத்து குறித்து பரமத்தி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story