பேளுக்குறிச்சி பெரிய மாரியம்மன் கோவில் எதிரே புதிய இடத்தில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைக்க பணி துவக்கம். ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து தாசில்தாரிடம் வாக்குவாதம்..
Rasipuram King 24x7 |8 Oct 2024 12:06 PM GMT
பேளுக்குறிச்சி பெரிய மாரியம்மன் கோவில் எதிரே புதிய இடத்தில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைக்க பணி துவக்கம். ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து தாசில்தாரிடம் வாக்குவாதம்..
நாமக்கள் மாவட்டம் ராசிபுரம் அடுத்த பேளுக்குறிச்சி பகுதியில் பெரிய மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் எதிரே பல ஆண்டுக்கு முன்பு கட்டப்பட்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டி உள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த பலரும் பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில் தற்போது அந்த மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியானது சிதிலமடைந்து உள்ளது. எப்போது விழும் என்ற அச்சத்தில் பொதுமக்கள் உள்ளனர். இந்த மேல்நிலை நீர் தேக்க தொட்டியை அகற்றிவிட்டு புதிதாக கட்டிக் கொடுக்க வேண்டும் என அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில், ஏற்கனவே உள்ள நீர்த்தேக்க தொட்டியின் அருகே நபார்டு திட்டத்தின் கீழ், சுமார் 38 லட்சம் ரூபாய் மதிப்பில், ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைக்க அதிகாரிகள் முடிவு செய்தனர். இதற்கு ஒரு தரப்பினர் ஏற்கனவே உள்ள நீர் தொட்டி தொட்டியை அகற்றி விட்டு அதே இடத்தில் தான் மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்ட வேண்டும், வேறு இடத்தில் கட்டக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், தற்போது பழைய மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி அருகே, புதிய தொட்டி அமைக்க அதிகாரிகள் அளவீடு செய்து பணியை தொடங்கினர். அப்போது, சேந்தமங்கலம் தாசில்தார் வெங்கடேஸ்வரனிடம் ஒரு தரப்பினர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்தப்பகுதியில் ஏற்கனவே இரு தரப்புக்கிடையே கோவில் பிரச்சனை உள்ள நிலையில், இந்த பணியின் போது ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படும் என்பதால், ராசிபுரம் டிஎஸ்பி விஜயகுமார் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
Next Story