கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபர் கொடூர கொலை: பெண்ணுக்கு கத்திக்குத்து!

கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபர் கொடூர கொலை: பெண்ணுக்கு கத்திக்குத்து!
எப்போதும் வென்றான் அருகே ஒரு பெண்ணுக்காக இரு கள்ளக்காதலர்கள் இடையே ஏற்பட்ட தகராறில் ஒருவர் கொலை செய்யப்பட்டார். 
தூத்துக்குடி மாவட்டம் எப்போதும் வென்றான் அருகே உள்ள காட்டுநாயக்கன்பட்டி, தெற்கு தெருவைச் சேர்ந்தவர் மாரி செல்வம் மனைவி முனியசெல்வி (39). இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். முனியசெல்வி கணவரை பிரிந்து 2 குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார் இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் ஜெய தர்மராஜா மகன் விஜிதரன் (44), இவர் டிரைவர் ஆக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் முனிய செல்விக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.  இதனிடையே முனியசெல்விக்கும் அவரது எதிர் வீட்டில் வசிக்கும் முத்துசாமி மகன் மாதவன் (24) என்பருடனும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று இரவு முனிய செல்வி மாதவனுடன் பேசிவிட்டு பின்னர், விஜிதரன் வீட்டுக்கு சென்று உள்ளார். இதைப் பார்த்து ஆத்திரம் அடைந்த மாதவன், கத்தியுடன் விஜிதரன் வீட்டுக்குள் சென்று அங்கிருந்த 2பேரையும் சரமாரியாக கத்தியால் குத்தினார்.  இதில் பலத்த காயம் அடைந்த விஜிதரன் சம்பவ இடத்திலேயே இறந்தார். படுகாயம் அடைந்த முனியசெல்வி சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து எப்போதுவென்றான் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) முருகன் வழக்குப் பதிந்து, மாதவனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story