ஆயுத பூஜை கொண்டாட தயாராகும் டிரான்ஸ்போர்ட் சிட்டி நாமக்கல்!
Namakkal King 24x7 |10 Oct 2024 7:55 AM GMT
நாமக்கல்லில் இயங்கி வரும் லாரி பாடி பில்டர் நிறுவனங்கள், மெக்கானிக்கல் ஒர்க் ஷாப், லாரி தொழில் சார்ந்த அனைத்து நிறுவனங்களும் சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை விழாவுக்கு தயாராகி வருகின்றன....
நவராத்திரி விழாவில், ஏழு நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில், நாளை சரஸ்வதிபூஜை மற்றும் ஆயுத பூஜை விழா நடக்கிறது. கொலு வழிபாட்டின், நிறைவு நாளாக சரஸ்வதி வழிபாடு கொண்டாடப்படுகிறது.கோவில் மற்றும் வீடுகளில், கொலு வைத்துள்ளவர்கள், மட்டுமல்லாது, அனைத்து வீடுகள், தொழிற்சாலைகள், பள்ளிகள், மருத்துவனைகள், அரசு அலுவலகங்கள், கடைகள் என, அனைத்து இடங்களிலும், நாளை சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுதபூஜை விழா கொண்டாடப்படுகிறது. நாமக்கல்லில் இயங்கி வரும் லாரி பாடி பில்டர் நிறுவனங்கள், மெக்கானிக்கல் ஒர்க் ஷாப், லாரி தொழில் சார்ந்த அனைத்து நிறுவனங்களும் சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை விழாவுக்கு தயாராகி வருகின்றன. இன்று மதியத்துக்கு மேல் வழக்கமான பணிகளை நிறுத்திவிட்டு, லாரி பட்டறைகளில் உள்ள லேத் மெஷின் மற்றும் அதை சார்ந்த உபகரணங்களை துடைத்து சுத்தம் செய்யப்படும். பட்டறை வளாகம் முழுவதும் துாய்மைப்படுத்தப்படும்.நாளை, வாழைக்கன்று, மாவிலை / கலர் ஜிகினா தோரணம் கட்டி, செவ்வந்தி மாலைகள் சூட்டி, விபூதி, சந்தனம், குங்குமம் இட்டு, பன்னீர் தெளித்து, பக்தி மணம் கமழ, சரஸ்வதி பூஜை கொண்டாடப்பட உள்ளது. அதற்காக, சர்க்கரை பொங்கல், கேசரி மற்றும் சுண்டல், பொரி -கடலை, மிட்டாய் வகைள், பழவகைகள் விற்பனைக்கு, கடைகள் தயாராகி விட்டன.நாமக்கல்லில் உள்ள தனியார் பள்ளி கல்லூரி மற்றும் தனியார் வங்கிகள், நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்களில், இன்றே சரஸ்வதி பூஜை கொண்டாடப்படும். இதன்காரணமாக, இன்று காலை முதல், அனைத்து கடைகளிலும் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது..
Next Story