இரண்டு கன்று குட்டிகளை கடித்த மசநாய்

காங்கேயம் நகராட்சிக்கு உட்பட்ட சின்னாய்புதூரில் இரண்டு கன்று குட்டிகளை மசநாய் கடித்து காயம்
காங்கேயம் சின்னாய்புதூரில் வசித்துக் கொண்டு விவசாயம் செய்து வருபவர் மணி. இவர் கால்நடைகள் வளர்ப்பிலும் ஈடுபட்டு வருகின்றார். மணியின் வீட்டு அருகிலேயே இவருக்கு சொந்தமான தோட்டத்தில் பட்டி அமைத்து இரவு நேரத்தில் அதில் மாடு மற்றும் கன்று குட்டிகளை கட்டி வைத்து வருவது வழக்கம். அதன்படி நேற்று மாலை மாடு மற்றும் கன்று குட்டிகளை பட்டியல் கட்டி வைத்துவிட்டு வீட்டிற்கு வந்து உறங்கி விட்டார். பின்னர் இன்று காலை மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்ல பட்டிக்கு சென்றபோது உள்ளே வெறி பிடித்த மசநாய் ஒன்று கன்று குட்டிகளை கடித்துக் கொண்டுள்ளதை பார்த்து சத்தமிட்டு அதனை விரட்டியுள்ளார். பின்னர் பட்டிக்குள் சென்று பார்த்த போது 6 மாதமான எருமை கன்றுக்குட்டி மற்றும் நாட்டு மாட்டு கன்றுக்குட்டியை வெறிபிடித்த மச நாய் கடித்தது தெரிய வந்தது. மேலும் கன்று குட்டியின் மூக்கு, முகம், கண் ஆகியவற்றில் காயம் ஏற்பட்டுள்ளது. பின்னர் கால்நடை மருத்துவரை வரவழத்து கன்று குட்டிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து காங்கேயம் நகராட்சி பகுதிகளில் ஆடுகள் மற்றும் மாடுகள் கன்று குட்டிகளை வெறி நாய்கள் தாக்குவது வாடிக்கையாக நடைபெற்று வருகின்றது என்பது விவசாயிகளிடையே வேதனை அளிக்கின்றது.
Next Story