உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் இரண்டாம் நாளாக ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர்.

தமிழ்நாடு முதலமைச்சர் “உங்களை தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ், பரமத்தி வேலூர் வட்டத்தில் 2-வது நாளாக மாவட்ட ஆட்சியர் மருத்துவர் ச.உமா, ஆய்வு.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் பரமத்தி வேலூர் வட்டத்தில் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ், 17.10.2024 அன்று காலை 9 மணி முதல் பல்வேறு இடங்களில் கள ஆய்வு மேற்கொண்டார். அதன் தொடர்ச்சியாக இன்று பரமத்தி வேலூர் வட்டத்தில் 2-வது நாளாக அரசின் திட்டங்கள், சேவைகள், செயல்பாடுகள் குறித்து கள ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் இன்று உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ், பாண்டமங்கலம் பேரூராட்சி அலுவலத்தில் அப்பகுதிகளில் துப்புரவு பணிகளை மேற்கொள்ளும் தூய்மை காவலர்களின் வருகை பதிவேடு, தூய்மை பணி மேற்கொள்ளும் பகுதிகள், அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பணிகள் ஆகியவை குறித்து விரிவாக ஆய்வு மேற்கொண்டு, தூய்மை பணியில் ஈடுபட உள்ள தூய்மை காவலர்கள் அனைவரும் தவறாமல் பாதுகாப்பு கவசங்களை அணிந்து கொள்ள வேண்டும் எனவும், கட்டாயம் அவர்களது அடையாள அட்டையையும் அணிந்திருக்க வேண்டும் என அறிவுறுத்தினார். மேலும், பாண்டமங்கலம் பேரூராட்சி பகுதிகளில் குடிநீர் விநியோகம் மற்றும் குப்பை சேகரிப்பு பணிகள் குறித்து நேரில் ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களுடன் கலந்துரையாடினார். வெங்கரை பேரூராட்சி, பால் உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்கத்தில் ஆய்வு மேற்கொண்டு பால் கொள்முதல் விலை,பால் பரிசோதிக்கப்படும் முறை, தினசரி கொள்முதல் செய்யப்படும் பாலின் அளவு, சங்கத்தில் உள்ள மொத்த பால் உற்பத்தியாளர்கள் உள்ளிட்ட விவரங்களையும், உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்பட்ட ஊக்கத்தொகை உள்ளிட்ட விவரங்களை விரிவாக கேட்டறிந்தார். பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனையில் மருந்து பொருட்களின் இருப்பு, நோயாளிகள் வருகை விபரம், காய்ச்சல் தொற்றுக்கு சிகிச்சை பெறும் நோயாளிகள் குறித்த விபரம், மழைக்கால நோய் தொற்றுக்களுக்கான மருந்து பொருட்களின் இருப்பு, நோயாளிகளுக்கான படுக்கை வசதி, வெளிபுற நோயாளிகள் பகுதி, மகப்பேறு பிரிவு, மகளிர் அறை, பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவு, கண்காணிப்பு அறையில் ஆய்வு மேற்கொண்டு, சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிடம் மருத்துவ சிகிச்சை மற்றும் உடல் நலம் குறித்து கேட்டறிந்தார். பரமத்தி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் பிள்ளைகளத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் குறித்து ஆய்வு மேற்கொண்டு பள்ளியில் பயிலும் மொத்த மாணவ, மாணவியர்களின் எண்ணிக்கை, காலை உணவுத்திட்டத்தின் கீழ் பயன்பெறுபவர்களின் எண்ணிக்கை குறித்து கேட்டறிந்து, உணவின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டு, மாவட்ட ஆட்சியர் பள்ளி மாணவ, மாணவியர்களுடன் கலந்துரையாடினார். அரசின் அனைத்து நலத்திட்டங்களும், சேவைகளும் தங்குதடையின்றி விரைந்து மக்களைச் சென்றடைவதை உறுதி செய்திடும் வகையில், ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ், பரமத்தி வேலூர் வட்டத்தில், மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட அளவிலான பல்வேறு துறைகள் சார்ந்த உயர் அலுவலர்கள் கள ஆய்வு மேற்கொண்டார்கள்.
Next Story