கந்த சஷ்டி திருவிழா முன்னேற்பாடு பணிகள்: ஆட்சியர் ஆலோசனை!

கந்த சஷ்டி திருவிழா முன்னேற்பாடு பணிகள்: ஆட்சியர் ஆலோசனை!
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் கந்த சஷ்டி திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று (18.10.2024), திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் 2024ம் ஆண்டு கந்த சஷ்டி திருவிழா 02.11.2024 முதல் 08.11.2024 வரை நடைபெறவுள்ளதைத் தொடர்ந்து பக்தர்களின் வசதிக்காக மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்ததாவது: திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் கந்த சஷ்டி திருவிழா வருகின்ற 02.11.2024 முதல் 08.11.2024 வரை சிறப்பாக நடைபெறவுள்ளதைத் தொடர்ந்து தகுந்த முன்னேற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான வாகனங்கள் வரும் என்பதால் வாகனங்கள் நிறுத்தும் இடங்கள் சீரமைக்கப்பட்டு வாகனங்கள் நிறுத்தும் வகையில் தயார்நிலை செய்யப்பட்டுள்ளதா என்பதையும், தற்காலிகப் பேருந்து நிலையம் மற்றும் தற்காலிக வாகன நிறுத்தங்கள் அமைப்பதற்கான ஏற்பாடுகளை சரியாக செய்யப்பட்டுள்ளதா என்பதையும், கோவில் நிர்வாகத்துடன் இணைந்து திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் மற்றும் திருச்செந்தூர் துணை காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் கண்காணிக்க வேண்டும். போக்குவரத்து நெரிசல் ஏற்படும் இடங்களை கண்டறிந்து அங்கு அதிக அளவில் காவல்துறையினர்களை பணியமர்த்தி போக்குவரத்தினை சரிசெய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அவசர கால நேர்வுகளில் ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் தங்கு தடையின்றி செல்லும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். திருவிழாவின் இறுதிநாளில் திரும்ப வரும் வாகனங்கள் நெரிசலின்றி வெளியே செல்ல தகுந்த முன்னேற்பாடுகள் மேற்கொள்ள வேண்டும். ஆட்டோ மற்றும் திறந்த வெளி வாகனங்களில் ஆட்கள் ஏற்றி செல்வதை தடை செய்து முறைப்படுத்த வேண்டும். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மூலம் கூடுதலாக பேருந்துகளை இயக்க வழிவகை செய்ய வேண்டும். கூடுதல் பேருந்துகள் நின்று செல்லும் இடங்களை வட்டார போக்குவரத்து அலுவலர் கண்காணிக்கவேண்டும். திருவிழா காலங்களில் அனைத்து நாட்களும் பக்தர்களுக்கு தேவையான குடிநீர் தட்டுப்பாடின்றி சுகாதாரமான முறையில் விநியோகம் செய்திட தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் கோயில் நிர்வாகத்துடன் இணைந்து உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும். தமிழ்நாடு மின்சார வாரியம் தங்கு தடையின்றி மின்சாரம் வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். கந்தசஷ்டி திருவிழாவின்போது ஏற்படும் குப்பைகளை டிராக்டர் மூலம் உடனடியாக அப்புறப்படுத்த திருச்செந்தூர் நகராட்சி மற்றும் கோவில் நிர்வாகம் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். குப்பைகளை உடனடியாக சுத்தம் செய்யும் பணியில் கோவில் நிர்வாகம் சேர்ந்து செயல்பட வேண்டும். மேலும் குப்பைகள் உடனுக்குடன் அகற்றுவதற்கு ஏதுவாக அருகில் உள்ள இதர போதுமான துப்புரவுப் பணியாளர்களை பயன்படுத்திடவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. கடற்கரைப்பகுதியில் தேவையான ரப்பர் படகுகள் தயார் நிலையில் வைத்திருக்கவும், கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்படவும் வேண்டும். கந்தசஷ்டி திருவிழா நாட்களில் பக்தர்களுக்கு எவ்வித தொற்று நோயும் ஏற்படாதவாறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வதுடன் போதிய மருந்துகள் இருப்பு வைத்துக்கொள்ள வழிவகை செய்ய வேண்டும். திருவிழாவிற்கு வரும் பக்தர்களின் மருத்துவ வசதிக்காக மருத்துவர், சுகாதார ஆய்வாளர், மருத்துவப்பணியாளர் கொண்ட சிறப்பு மருத்துவக்குழு அமைக்கப்பெற்று சுழற்சி முறையில் 24 மணி நேரமும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவப்பணியாளர்கள் பணிபுரிகிறார்களா என்பதை கண்காணிக்க வேண்டும். கோவிலின் உட்புற மற்றும் வெளிப்புற பிரகாரங்களில் தேவையான இடங்களில் தற்காலிக மருத்துவ மனை வசதிகள் செய்திடவும், தேவையான ஆம்புலன்ஸ் வசதிகள் செய்திடவும், கோவில் நிர்வாகத்துடன் இணைந்து சுகாதாரத்துறை செயல்பட கேட்டுக் கொள்ளப்படுகிறது. காவல் துறையினருக்கு கண்காணிப்பு கோபுரங்கள் மற்றும் உரிய இடங்களில் சிசிடிவி கண்காணிப்பு காமிரக்கள் அமைத்துக் கொடுத்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் மற்றும் தேவையான இடங்களில் மரப்பாலங்கள் அமைக்க பொதுப்பணித்துறை கோவில் நிர்வாகத்துடன் இணைந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். உணவு மற்றும் பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலர், கடைகளில் காலாவதியான உணவு பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும். உணவகங்கள் மற்றும் சாலையோர உணவகங்களில் ஆய்வு மேற்கொண்டு உணவுகளின் தரம் மற்றும் சுகாதாரத்தினை உறுதி செய்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். உணவகங்கள் மற்றும் சில்லரை விற்பனை கடைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா என்பதை கண்காணித்து நடவடிக்கை எடுத்திட வேண்டும். திருவிழா காலங்களில் பக்தர்களுக்கு இடையூராக தெருக்களில் சுற்றித்திரியும் நாய்கள் மற்றும் மாடுகளை அப்புறப்படுத்திடவும், உரிய தடுப்பு மருத்துவ வசதி செய்திட திருச்செந்தூர் நகராட்சி நிர்வாகம் கால்நடைத்துறையுடன் இணைந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் தொடர்புடைய பொருட்கள் பயன்படுத்துவது முற்றிலும் தடை செய்யபட வேண்டும் அதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்திட திருச்செந்தூர் நகராட்சி, உணவு பாதுகாப்புத்துறை மற்றும் கோவில் நிர்வாகம் ஆகியோர்கள் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். திருவிழாவிற்கு வரும் பக்தர்கள் பயன்பெறும் வகையில் போதுமான அளவிற்கு நகரும் கழிவறைகள்அமைத்திட கோவில் நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். திருவிழா காலங்களில் அனைத்து பணிகளையும் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் இணை ஆணையர் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் ஒருங்கிணைத்து செயல்படுத்திட கேட்டுக்கொள்ளப்பட்டது. திருவிழா காலங்களில் ஏற்படும் சட்டம் மற்றும் ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு பணி குறித்த விபரங்களை அவ்வபோது மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவித்திடவும், உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும் திருச்செந்தூர் கோட்டாட்சியர், திருச்செந்தூர் துணை காவல் கண்காணிப்பாளர் மற்றும் திருச்செந்தூர் வட்டாட்சியர் ஆகியோர்களை கேட்டுக்கொள்ளப்பட்டது என ஆட்சியர் க.இளம்பகவத், தெரிவித்தார். இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான், மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய் சீனிவாசன், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் அருள்முருகன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் எடிசன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சேதுராமலிங்கம், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் இணை ஆணையர் ஞானசேகரன், திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் சுகுமாறன், சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
Next Story