மங்கலம்பேட்டை இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் சஸ்பெண்ட்

மங்கலம்பேட்டை இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் சஸ்பெண்ட்
கொலை வழக்கில் கிராம உதவியாளரை கைது செய்யாமல் இருக்க பணம் வாங்கியதாக புகார்
மங்கலம்பேட்டை, அக்.20- விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை அருகே உள்ள மாத்தூர் முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் பக்கிரி மகன் பாக்கியராஜ் (வயது. 40), பெயிண்டரான இவருக்கும், அவரது நண்பரான அதே பகுதியைச் சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவரான சுப்பிரமணியன் மகன் கலைவாணன் என்ற ராம்கி (38) என்பவருக்கும் இடையே கடந்த ஜூன் மாதம் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த கலைவாணன் பாக்யராஜை சரமாரியாக தாக்கியதில், ரத்த வெள்ளத்தில் கிடந்தவரை மீட்டு தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தும் சிகிச்சை பலனின்றி பாக்யராஜ் இறந்தார். இது குறித்து புகாரின் பேரில் கலைவாணன் மீது மங்கலம்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். அப்போது பாக்யராஜ் உறவினர்கள் கலைவாணன், அவரது அண்ணன் கிராம உதவியாளரான மணிமாறன், அவரது தந்தையான ஊராட்சி மன்ற தலைவர் சுப்பிரமணியன் ஆகிய மூன்று பேரும் சேர்ந்து தான் பாக்யராஜை அடித்து வீட்டிற்குள்ளே போட்டு விட்டு சென்று விட்டனர். 2 நாட்களாக அவரை காணாததால் அவரது உறவினர்கள் வீட்டிற்கு சென்று பார்த்தபோது அவர் மீது ரத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் வீட்டிற்குள் சுயநினைவின்றி கிடந்துள்ளார். அதன்பிறகு அவரை மீட்டு சிகிச்சைக்காக சேர்த்தும் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். அவரது கொலைக்கு காரணமான ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் அவரது இரு மகன்கள் ஆகிய மூன்று பேரையும் கைது செய்ய வேண்டும். எனக் கூறி பாக்யராஜ் உறவினர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மங்கலம்பேட்டை போலீசார் கலைவாணனை தொடர்ந்து அவரது தந்தையான ஊராட்சி மன்ற தலைவர் சுப்பிரமணியனை கைது செய்தனர். இந்நிலையில் சுப்பிரமணியன் ஜாமினில் வெளியே வந்த போது, இந்த வழக்கில் அவரது மற்றொரு மகனான மணிமாறனை விடுவிப்பதற்காக ஊராட்சி மன்ற தலைவர் சுப்பிரமணியனிடம் மங்கலம்பேட்டை இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் 3.50 லட்சம் பணம் கேட்டதாக தெரிகிறது. இதில் ரூபாய் 1.65 லட்சம் பணத்தை சுப்பிரமணியன் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரனிடம் கொடுத்துள்ளர். மீதி பணத்தைக் கேட்டு இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் சுப்பிரமணியனை தொந்தரவு செய்து வந்துள்ளார். கூடுதலாக பணம் கேட்டதால், கொடுக்க விருப்பமில்லாத சுப்பிரமணியன் காவல்துறை உயர் அதிகாரிகளிடம் புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரை விழுப்புரம் சரக டிஐஜி திஷா மிட்டல் விசாரித்துள்ளார். இதில் குற்றவாளி தரப்பிடமிருந்து இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் பணம் பெற்றது நிரூபணமானதாக கூறப்படுகிறது. அதனால் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரனை டிஐஜி திஷா மிட்டல் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.
Next Story