நீதிமன்றம் கட்ட நீதிபதியிடம் நில ஆவணங்களை தானமாக  ஒப்படைத்த தாசில்தார், இட உரிமையாளர்கள்  

நீதிமன்றம் கட்ட நீதிபதியிடம் நில ஆவணங்களை தானமாக  ஒப்படைத்த தாசில்தார், இட உரிமையாளர்கள்  
X
குமாரபாளையம் அருகே நீதிமன்றம் கட்ட நிலம் ஒப்படைப்பு நிகழ்வு நடந்தது
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள மேட்டுக்கடை பகுதியில் புதியதாக நீதிமன்றம் கட்டுவதற்காக ஈரோட்டை சார்ந்த தொழிலதிபர் நரேந்திர குமார் நகத், அவரது மனைவி ரேணுதேவி நகத் ஆகியோர் சுமார் இரண்டு கோடி ரூபாய் மதிப்பிலான 2 ஏக்கர் 24 சென்ட் நிலத்தை அரசுக்கு தானமாய் வழங்கினர்.  இதன் நகலை மாவட்ட கலெக்டர்  உமா வசம்  வழங்கியதையடுத்து, சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் பேரிலும், நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா பரிந்துரையின் பேரிலும்  குமாரபாளையம் வட்டாட்சியர் சிவக்குமார், மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி (பொறுப்பு)  மாலதி வசம் நிலத்தை ஒப்படைப்பு  செய்யும் வகையில் நிலத்தின் பத்திரத்தை, நிலத்தின் உரிமையாளர்கள்  வழங்கினர். இதில்  குமாரபாளையம் ஆர்.ஐ. புவனேஸ்வரி, அமானி வி.ஏ.ஓ. தேவராஜ், மோடமங்கலம் வி.ஏ.ஓ. ஜனார்த்தனன்  உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். இது குறித்து குமாரபாளையம் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் சரவணராஜன் கூறியதாவது: தற்போது மேட்டுக்கடை பகுதியில் நீதிமன்றம் கட்ட இடம் வழங்கியதாக கூறப்படும் இடம், நீதிமன்றம் கட்ட போதுமானதாக இருக்காது. இந்த இடத்திற்கு பொதுமக்கள் எளிதில் வந்து செல்லவும் போதுமான பேருந்து வசதி, பாதுகாப்பான சூழ்நிலை ஆகியன இல்லை என்று பொதுமக்கள் சார்பிலும், எங்கள் சங்கம் சார்பிலும் ஆட்சேபம் தெரிவித்து உள்ளோம். பொதுமக்கள் எளிதில் நீதிமன்றத்திற்கு வந்து செல்லும்  வகையிலும், பொதுமக்களுக்கு பாதுகாப்பான சூழ்நிலை இருக்கும்படியாகவும், தகுந்த இடத்தை தேர்வு செய்து, நீதிமன்றம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
Next Story