தமிழ் ஆட்சிமொழி சட்ட வார விழிப்புணர்வுப் பேரணி

X
அரியலூர், டிச.23 - அரியலூரில், தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் ஆட்சிமொழி சட்ட வார விழிப்புணர்வு பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆட்சியர் பொ.ரத்தினசாமி பேரணியை கொடியசைத்து தொடக்கி வைத்தார்.பேரணியானது, தேரடி, சத்திரம் பேருந்து நிறுத்தம் வழியாகச் சென்று மீண்டும் வட்டாட்சியர் அலுவலகத்தில் நிறைவடைந்தது. பேரணியில் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய மாணவர்கள் பங்கேற்று எங்கும் தமிழ், எதிலும் தமிழ், இன்பத்தமிழ் எங்கள் உயிருக்கு நேர், அறிவிப்பு பலகையெல்லாம் அருந்தமிழ்ச்சொல் ஆக்குவோம், தனிமொழியானதும் தமிழே தாய்மொழியாதும் தமிழே, தமிழில் கையொப்பமிடுவோம் தமிழர் நாம் என்று பாடுவோம், அன்னைத் தமிழே ஆட்சித்தமிழே, எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியும், முழக்கமிட்டும் சென்றனர்.தொடர்ந்து, வாகனங்களில் பெயர்பலகையினை தமிழில் வைக்கவேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் அவசரகால ஊர்தியில் ஒட்டு வில்லைகளை ஆட்சியர் ஒட்டி விழிப்புணர்வை ஏற்படுத்தி வைத்தார்.நிகழ்ச்சியில், தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் சித்ரா, வட்டாட்சியர் முத்துலெட்சுமி, மாவட்ட நூலக அலுவலர் வேல்முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Next Story

