சாலையில் தேங்கும் கழிவுநீர் செல்வபெருமாள் நகரில் சீர்கேடு

X
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதுார் பேரூராட்சிக்குட்பட்ட செல்வ பெருமாள் நகர், 2வது குறுக்கு தெருவில், 30க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில் பாதாள சாக்கடை திட்டத்திற்காக குழாய் பதிக்கப்பட்டுள்ளது. ஆனால், கழிவுநீர் இணைப்பு வீடுகளுக்கு வழங்கவில்லை. இதனால், அப்பகுதிவாசிகள் சிலர் மழைநீர் வடிகாலில் கழிவுநீரை விடுகின்றனர். மேலும், மழைநீர் கால்வாயில் தேங்கும் கழிவுநீர், சமீபத்தில் பெய்த மழையால், கால்வாயில் இருந்து வெளியேறி சாலையில் தேங்கியுள்ளது. இதன் காரணமாக பள்ளி, கல்லுாரிக்கு நடந்து செல்லும் மாணவர்கள், அப்பகுதிவாசிகள் மட்டுமின்றி, இவ்வழியாக செல்வோர் கழிவுநீரில் நடந்து செல்ல வேண்டிய அவலநிலை உள்ளது. வேகமாக செல்லும் வாகனங்களால், கழிவுநீர் தெளிப்பதால் நடந்து செல்வோர் மனஉளைச்சலுக்கு ஆளாகின்றனர். இரண்டு மாதங்களுக்கு மேலாக கடும் சிரமத்திற்கு ஆளாகி வருவதோடு, தொற்று நோய் பரவும் அச்சத்தில் உள்ளனர். எனவே, வீடுகளுக்கு பாதாள சாக்கடை இணைப்பு வழங்க, பேரூராட்சி நிர்வாகத்தினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story

