வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற அழைப்பு

X
தமிழக அரசின் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை திட்டத்தின் கீழ், 10ம் வகுப்பு தோல்வி அடைந்தவர்களுக்கு 200 ரூபாயும், 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு 300 ரூபாயும், பிளஸ் 2 தேர்ச்சி அல்லது பட்டய படிப்புக்கு 400 ரூபாயும், பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு 600 ரூபாய் வீதம் மாதந்தோறும் உதவித்தொகை வழங்கப்படுகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து குறைந்தது, ஐந்து ஆண்டுகள் நிறைவு பெற்றிருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் ஓராண்டு நிறைவு செய்திருந்தால் போதும். விண்ணப்பதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் 72,000 ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும். ஏற்கனவே உதவித்தொகை பெற்றிருக்க கூடாது. மகளிர் உரிமைத்தொகை மற்றும் அரசு வாயிலாக பிற உதவித்தொகை பெறுவோருக்கு இத்திட்டத்தில் உதவித்தொகை பெற தகுதியில்லை. விருப்பம் உள்ள பதிவுதாரர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவசமாக வழங்கப்படும் விண்ணப்பத்தை பெற்றுக் கொள்ளலாம். www.tnvelaivaaippu.gov.in//empower என்ற இணையதள முகவரியிலும் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன், வருமானச் சான்று, மாற்றுச்சான்றிதழ், கல்விச்சான்று நகல், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல் ஆகியவற்றுடன் நேரில் சமர்ப்பிக்க வேண்டும். உதவித்தொகை பெறுவதால் வேலைவாய்ப்பு அலுவலகம் வாயிலாக பெறப்படும் பரிந்துரைகள் பாதிக்கப்படாது என, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.
Next Story

