சம்பா நெல் வரத்து அதிகரிப்பு
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் மாவட்டத்திலேயே மிகப்பெரிய வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடம் அமைந்துள்ளது. இந்த ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் அறுவடை காலங்களில் சுமார் ஒரு கோடிக்கு மேல் வர்த்தகம் நடைபெறும். தற்போது சம்பா நெல் வரத்து தொடங்கியுள்ளது. அந்த வகையில் நேற்று மட்டும் நெல் உள்ளிட்ட தானியங்கள் 217 லாட் எடுக்கப்பட்டு 4580 குவிண்டாலுக்கு ஒரு கோடியே 5 லட்சத்தி 40 ஆயிரத்தி 447 ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது. தற்போது விருத்தாசலம் பகுதியில் சம்பா சாகுபடி பணிகள் முடிந்து அறுவடை பணிகள் தொடங்கியுள்ளதால், விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு நெல் வரத்து வர தொடங்கியுள்ளது. மாலை வரை 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகளை விவசாயிகள் கொள்முதல் செய்வதற்காக கொண்டு வந்தனர். இதில் அதிகபட்சமாக நெல் மூட்டைகளும், மற்றும் இதர தானியங்களான மணிலா உளுந்து பச்சை பயிறு நாட்டு கம்பு சோளம் உள்ளிட்ட பல்வேறு தானிய மூட்டைகள் என மொத்தம் 6031 மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டன. 75 கிலோ அளவுள்ள நெல் மூட்டைகளில் பிபிடி ரகம் அதிகபட்சமாக 1663 ரூபாய்க்கும், குறைந்த விலையாக 1400 ரூபாய்க்கு விற்பனையானது. இதே போல 80 கிலோ அளவுள்ள மணிலா மூட்டை அதிகபட்சமாக 7756 ரூபாய்க்கும், எள் - 10699 ரூபாய்க்கும், 100 கிலோ அளவுள்ள உளுந்து மூட்டை 8956 ரூபாய்க்கும், தேங்காய் பருப்பு மூட்டை 8201 ரூபாய்க்கும் விலை போனது. இதே போல கடலூர் மாவட்டத்தில் நெல் அறுவடை தீவிரமாக நடந்து வருவதால் எதிர்வரும் காலங்களில் நெல் வரத்து அதிகரிக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Next Story









