கோணாங்குப்பம் புனித பெரிய நாயகி அன்னை ஆலய தேர் பவனி

ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கோணாங்குப்பம் புனித பெரிய நாயகி அன்னை எழுந்தருளிய தேர் பவனி நடந்தது. கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கோணாங்குப்பம் கிராமத்தில் புகழ்பெற்ற புனித பெரியநாயகி அன்னை ஆலயம் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் ஆண்டு பெருவிழா 10 நாட்கள் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான பெருவிழா கடந்த 14-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத்தொடர்ந்து தினந்தோறும் சிறப்பு திருப்பலியும், பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஆலய பங்குதந்தைகள் தலைமையில் சிலுவை பாதையும் நடந்து வந்தது. விழாவின் சிகர நிகழ்ச்சியான ஆடம்பர தேர்பவனி நேற்று இரவு நடைபெற்றது. இதையொட்டி நேற்று காலை 7.30 மணிக்கு ஆடம்பர கூட்டு திருப்பலி நடைபெற்றது. இரவு 9 மணிக்கு ஆடம்பர தேர் பவனி நடைபெற்றது. அப்போது பாரம்பரிய முறைப்படி பாளையக்காரர் , ஜமீன் அலங்கார உடையில் முகாசபரூரில் உள்ள தனது வீட்டில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு பெரியநாயகி அன்னை ஆலயத்திற்கு அழைத்து வரப்பட்டார். அங்கு அவருக்கு பங்குதந்தை ஆக்னல் தலைமையிலான குழுவினர் வரவேற்பளித்தனர். இதையடுத்து தேரோட்டத்தை புதுவை- கடலூர் உயர்மறை மாவட்ட பேராயர் பிரான்சிஸ் கலிஸ்ட், பங்கு தந்தையர்கள், பாளையக்காரர் பொன் வீர சேகர வேலுசாமி கச்சிராயர் ஆகியோர் தொடங்கி வைக்க, தேர் பவனி ஆலயத்தை சுற்றி வலம் வந்தன. இதில் முன்னால் மாவட்ட கவுன்சிலர் ஆர்.ஜி.சாமி, முன்னால் ஒன்றிய கவுன்சிலர் சாந்தி மதியழகன், மற்றும் ஆலய ஊழியர்கள், விழாக் குவினர், மக்கள் பிரதிநிதிகள், ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். மங்கலம்பேட்டை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை திருத்தல அதிபர் ஆக்னல், உதவி பங்கு தந்தை அருட்பணி ஆரோக்கியதாஸ் மற்றும் புனித பெரியநாயகி அன்னை திருத்தல விழா குழுவினர் செய்து இருந்தனர். முன்னதாக விழாவிற்கு பொதுமக்கள் கிறிஸ்துவர்கள் திரண்டு வந்தனர். அப்போது ஆலயத்திற்குள் வந்த பொது மக்களின் கூட்ட நெரிசலை சரி செய்யும் விதத்தில் மங்கலம்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் பொட்டா தலைமையிலான போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் சப் இன்ஸ்பெக்டர் பொட்டா கிறிஸ்தவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு உதவும் வகையில் மாதா அணிந்திருந்த மலர்களை எடுத்துக் கொடுத்தார். மேலும் பொதுமக்கள் தங்களது குழந்தைகளை புனித பெரியநாயகி அன்னையின் பாதத்தில் அமர வைக்க முடியாமல் கூட்ட நெரிசலில் தவித்தனர். இதனைப் பார்த்த சப் இன்ஸ்பெக்டர் பொட்டா குழந்தைகளை வாங்கி புனித பெரிய நாயகி அன்னை பாதத்தில் அமர வைத்து மீண்டும் தூக்கி பொதுமக்களிடம் கொடுத்தார். இதனை பார்த்தவர்கள் சப் இன்ஸ்பெக்டரின் மனிதநேய பண்பை பாராட்டினார்கள்.
Next Story