அதிவேக கனரக வாகனங்களால் பள்ளி மாணவ - மாணவியர் பீதி

X
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியம் திருமுக்கூடல் - சாலவாக்கம் சாலையில், அருங்குன்றம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்திற்கான அரசு தொடக்கப்பள்ளி, பட்டா கூட்டுச்சாலை அருகே அமைந்துள்ளது. குடியிருப்பு பகுதியில் இருந்து, அரை கி.மீ., துாரத்தில் உள்ள பள்ளிக்கு, மாணவ - மாணவியர் தினமும் நடந்து சென்று பயின்று வருகின்றனர்.இந்நிலையில், அருங்குன்றம் சுற்றுவட்டார பகுதிகளில் இயங்கும் தனியார் கல் குவாரி மற்றும் கல் அரவை தொழிற்சாலைகளில் இருந்து, இச்சாலை வழியாக தினமும் ஏராளமான கனரக வாகனங்கள் செல்கின்றன.அதிவேகமாக இயங்கும் லாரிகளால், பள்ளி மாணவர்கள் சாலையை கடப்பதில் சிரமப்படுகின்றனர். சாலையில் நடந்து செல்லும் குழந்தைகள், கவனக்குறைவால் விபத்தில் சிக்கும் அபாய நிலை உள்ளதாக பெற்றோர் அச்சப்படுகின்றனர். இதனால், தினமும் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து வந்து, மீண்டும் பாதுகாப்பாக அழைத்துச் செல்லும் பணியில் பெற்றோர் ஈடுபட்டு வருகின்றனர். எனவே, காலை - மாலை பள்ளி நேரத்தில், அருங்குன்றம் சாலையில் கனரக வாகனங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துஉள்ளனர்.
Next Story

