திருமணத்திற்கு அழைக்க சென்ற இளம்பெண் விபத்தில் உயிரிழப்பு

X
திருவள்ளூர் மாவட்டம் உளுந்தை கிராமம், எல்லையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மகேஸ்வரி, 34. சிங்கிடிவாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவருக்கு பிப்., 2ம் தேதி திருமணம் நடைபெற உள்ள நிலையில், பிள்ளைச்சத்திரத்தில் உள்ள நண்பர் வீட்டிற்கு திருமண அழைப்பிதழ் கொடுக்க, அவரது சகோதரியின் கணவர் திருமலையுடன், நேற்று முன்தினம் ‛ஹீரோ பேஷன் புரோ' இருசக்கர வாகனத்தில் சென்றுவிட்டு, உளுந்தை திரும்பினார். சென்னை -- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், சேந்தமங்கலம் அருகே வந்தபோது, மகேஸ்வரி எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்தார். இதில் பலத்த காயமடைந்தவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சுங்குவார்சத்திரம் போலீசார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர். திருமணத்திற்கு ஒரு வாரமே உள்ள நிலையில், திருமணம் அழைப்பிதழ் கொடுத்துவிட்டு திரும்பிய இளம்பெண் விபத்தில் உயிரிழந்தது, உளுந்தை கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Next Story

