ஆவணம் அரசு மேல்நிலைப்பள்ளியில் உயர் மதிப்பெண் பெற்றவர்களுக்கு பரிசளிப்பு - பாராட்டு விழா

X
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள ஆவணம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆண்டு விழா மற்றும் உயர் மதிப்பெண் பெற்றவர்களுக்கான பரிசளிப்பு, பாராட்டு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, பள்ளித் தலைமை ஆசிரியர் மு.கருணாநிதி தலைமை வகித்தார். முதுகலை ஆசிரியர் க.நேரு வரவேற்றார். கிராம கமிட்டித் தலைவர் எஸ்.அடைக்கலம், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் க.அடைக்கலம், பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் ஹ.இளவரசி, ஓய்வு தலைமையாசிரியர்கள் சி.முதல்வன், வீ.மனோகரன், அட்மா தலைவர் க.அன்பழகன், பானுமதி அடைக்கலம், இஸ்ரோ ஆசிரியர் சண்முகநாதன், ஜமாஅத் தலைவர் அப்துல் கரீம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார். ஆவணம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து, தற்போது திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயின்று வரும் மாணவர் ஹரிஷுக்கு ரூ.1 லட்சம், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவிகள் ஷாலினி, புவனேஸ்வரி, ஷிஃபா பாத்திமா, மகாஸ்ரீ ஆகிய நால்வருக்கு தலா ரூ.25 ஆயிரம் என மொத்தம் ரூபாய் 2 லட்சத்தை, சென்னை தொழிலதிபர் எஸ்.ஏ.சி இயக்குனர் ப.சுப்பிரமணி நேரில் வழங்கினார். மேலும், 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் முதலிடம் பெற்ற மூன்று பேருக்கு 10 ஆயிரம், 5ஆயிரம், 3 ஆயிரம் என மொத்தம் 18 ஆயிரத்தை சொ.மணிகண்டன், வெளியூரிலிருந்து வந்து ஆவணம் அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் 34 பேருக்கு தலா ரூ.1,000 வீதம் ஆவணம் தொழிலதிபர் கோவை எஸ்.பாலசுந்தரம் ஆகியோர் மாணவர்களிடம் வழங்கினர். பள்ளி முன்னாள் மாணவரான மருத்துவம் பயிலும் ஹரிஷ் பள்ளி வளர்ச்சிக்கு ரூ.25 ஆயிரம் நன்கொடையாக வழங்கினார். தொடர்ந்து மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நிறைவாக பட்டதாரி ஆசிரியை ஏ.எஸ்.கவிதா நன்றி கூறினார்.
Next Story

