முத்துச்சாமி அமைச்சர் பேட்டி

முத்துச்சாமி அமைச்சர் பேட்டி
X
திமுக வேட்பாளரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் மக்கள் வெற்றி பெற செய்வார்கள் என்ற நம்பிக்கை அமைச்சர் முத்துசாமி பேட்டி
ஈரோடு இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் சந்திரகுமாரை மிகப்பெரிய வாக்குகள் வித்தியாசத்தில் மக்கள் வெற்றி பெற செய்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளதாக அமைச்சர் சு.முத்துசாமி தெரிவித்தார். ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சந்திரகுமார் இறுதிக்கட்ட பிரசாரத்தை நேற்று மாலை நிறைவு செய்தார். இதையடுத்து அமைச்சர் சு.முத்துசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது: இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வி.சி சந்திரகுமார் வாக்கு கேட்டு தொகுதி முழுவதும் சென்று மக்களை சந்தித்து பிரசாரத்தை நிறைவு செய்திருக்கிறோம். எங்களது பிரசாரத்திற்கு மக்கள் சிறப்பான ஆதரவு அளித்தனர். வாக்கு கேட்க வருகிறோம் என்ற உணர்வோடு பார்க்காமல் அவர்களில் ஒருவராக எங்களை அழைத்ததும் வரவேற்பு அளித்ததும் மகிழ்வாக இருந்தது. குறிப்பாக பிரசாரத்திற்கு சென்ற இடங்களில் பெண்கள் மிகப்பெரும் ஆதரவை அளித்தனர். முதல்வர் கொண்டு வந்துள்ள சிறப்பான திட்டங்களை, மக்களே நினைவுபடுத்தி உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிப்போம் என எங்களிடம் கூறினார்கள். வாக்கு கேட்பதற்காக வாகனத்தில் சென்று வருவதை விட, மக்களை நேரடியாக சந்திக்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் எங்களுக்கு உத்தரவிட்டிருந்தார். அதன்படி, தொகுதிக்குட்பட்ட 33 வார்டுகளிலும் 140 கிலோ மீட்டர் அளவிற்கு நடந்து சென்று பிரசாரம் செய்துள்ளோம். மக்களை நெருக்கமாக சந்திக்க வேண்டும் என்பதற்காக இந்த ஏற்பாட்டை செய்திருந்தோம். அப்போது, மக்கள் சிறு,சிறு பிரச்சனைகள் இருப்பதையும் எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தனர். அந்த பிரச்சனைகளை தேர்தல் முடிந்த பிறகு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி அதற்கான தீர்வை ஏற்படுத்துவோம் என உறுதி அளித்துள்ளோம். மிகப்பெரிய வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் வி.சி சந்திரகுமாரை மக்கள் வெற்றி பெற செய்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. பிரசாரத்தில் இணைந்து பணியாற்றிய திமுக நிர்வாகிகளுக்கும் தோழமை கட்சியினருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு அமைச்சர் சு.முத்துசாமி கூறினார்.
Next Story