இரவில் இயங்கும் கனரக வாகனங்கள் வாலாஜாபாதில் நெரிசல் அதிகரிப்பு

இரவில் இயங்கும் கனரக வாகனங்கள் வாலாஜாபாதில் நெரிசல் அதிகரிப்பு
X
வாலாஜாபாத் சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க, கனரக வாகனங்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் சுற்று வட்டார பகுதிகளில் இயங்கும் பல்வேறு தனியார் தொழிற்சாலைகளில் இருந்து, மாலை 5:00 மணி முதல், இரவு 8:00 மணி வரை, கம்பெனி பேருந்துகள் அதிகம் இயங்குகின்றன. இதேபோல், உத்திரமேரூர் ஒன்றியத்தின் பல்வேறு பகுதிகளில் இயங்கும் கல் குவாரி மற்றும் கிரஷர்களில் இருந்தும், இரவு நேரத்தில் அதிக கனரக வாகனங்கள், வாலாஜாபாத் வழியாக இயங்குகின்றன. இதனால், வாலாஜாபாத் சாலையில், இரவு நேரங்களில் தினமும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி, வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். குறிப்பாக, வாலாஜாபாத் பஜார் வீதியில் அணிவகுத்து செல்லும் கனரக வாகனங்களால், இருசக்கர வாகன ஓட்டிகள் மிகவும் பாதிப்பிற்குள்ளாகின்றனர். காஞ்சிபுரம் - வாலாஜாபாத் - வண்டலுார் வழியாக தாம்பரம் செல்லும் சாலையை, நான்கு வழியாக விரிவுபடுத்தும் பணி நிறைவு பெற்றுள்ளது. இருப்பினும், வாலாஜாபாத் பேரூராட்சியில், சேர்க்காடு முதல் அண்ணா நகர் வரை மற்றும் வாலாஜாபாத் சதுக்கம் முதல் ராஜவீதி, செங்கல்பட்டு சாலை வரை சாலை விரிவுபடுத்தப்படவில்லை.மேலும், ஒரகடம், ஸ்ரீபெரும்புதுாரை சுற்றியுள்ள தனியார் தொழிற்சாலை பேருந்துகள், வாலாஜாபாத் சேர்க்காடு, ராஜவீதி வழியாக செல்லும் போது, போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக, வாலாஜாபாத் - வண்டலுார் சாலையில், சேர்க்காடு வளைவு முதல், ரயில் நிலையம் வரையில் வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால், இரவு நேரங்களில் வீடு திரும்பும் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். எனவே, வாலாஜாபாத் சாலையில், இரவு நேரங்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க, கனரக வாகனங்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பல தரப்பினரும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
Next Story