திருமருகல் திறந்தவெளி அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில்

தேங்கி கிடக்கும் நெல் மூட்டைகள் மழை நீரில் நனைந்து சேதமடையும் அபாயம்
நாகை மாவட்டத்தில், சம்பா நெல் அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அறுவடை செய்யப்பட்ட சம்பா நெல்லை கொள்முதல் செய்ய தமிழக அரசு சார்பில், மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. திருமருகல் ஒன்றியத்தில் திட்டச்சேரி, வாழ்குடி, விற்குடி, அம்பல், குரும்பூர், ஏர்வாடி, ஆலத்தூர், வடகரை, கொட்டாரக்குடி, காரையூர், குத்தாலம், அண்ணாமண்டபம், ராராந்திமங்கலம், பொறக்குடி, பெருநாட்டாந்தோப்பு உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட இடங்களில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. திருமருகல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகளிடம் இருந்து அறுவடை செய்த நெல்லை, அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூலம் வாங்கப்பட்டு வருகிறது. அவ்வாறு கொள்முதல் செய்யப்பட்ட நெல்மூட்டைகள் நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. திருமருகல் ஒன்றியத்தில் பெரும்பாலான நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள், நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு கொண்டு செல்லப்படாமல் தேங்கிக் கிடக்கின்றன. இந்நிலையில், திருமருகல் ஒன்றியத்தில் பெரும்பாலான அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறந்தவெளியில் உள்ளன. விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு எடுத்துச் செல்லப்படாமல், ஒவ்வொரு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும் 5 ஆயிரம் நெல் மூட்டைகள் தேங்கிக் கிடக்கின்றன. தற்போது திடீரென கோடைமழை பெய்து வருவதால், திறந்த வெளிகளில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகள் நனைந்து சேதமடையும் அபாயம் உள்ளது. இது குறித்து விவசாயிகள் கூறுகையில், எங்களிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள், நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு அனுப்பி வைக்கப்படும். ஆனால், திருமருகல் ஒன்றியத்தில் உள்ள பெரும்பாலான அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு நெல் மூட்டைகளை ஏற்றிச் செல்ல, நுகர்பொருள் வாணிபக் கழகத்திலிருந்து லாரிகள் அனுப்பாததால், நெல் மூட்டைகள் தேங்கிக் கிடக்கின்றன. தற்போது திடீரென மழை பரவலாக பெய்து வருகிறது. இதனால், நெல் மூட்டைகள் மழை நீரில் நனைந்து சேதமடையும் அபாயம் உள்ளது. எனவே, நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் தேங்கிக் கிடக்கும் நெல் மூட்டைகளை விரைவாக எடுத்துச் சென்று பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story