வைக்கோல் வாங்க வியாபாரிகள் வராததால்
நாகை மாவட்டத்தின் கடைமடை பகுதியான, திருமருகல் பகுதியில் அரசலாறு, திருமலைராஜன் ஆறு, முடிகொண்டான் ஆறு, வடக்குப்புத்தாறு, ஆழியாறு, நரிமணி ஆறு, வீரமுட்டி ஆறு, தெற்குப்புத்தாறு, பிராவடையானாறு, வளப்பாறு ஆகிய ஆறுகள் மூலம் ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. தற்போது, திருமருகல் பகுதியில் சுமார் 25 ஆயிரம் ஏக்கரில் சம்பா மற்றும் தாளடி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இப்பகுதியில், பெய்த கனமழையால் சேதமடைந்த நெற்பயிர்களால் மகசூல் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், திருமருகல் பகுதியில் நெல் அறுவடைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆட்கள் பற்றாக்குறையால் எந்திரம் மூலம் விவசாயிகள் அறுவடை பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வயல்களில் தேங்கி கிடக்கும் வைக்கோலை கால்நடைகளுக்கு உணவுக்காக கொடுத்து விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர். இருப்பினும், பேப்பர் தயாரிப்பு மற்றும் பிற தேவைகளுக்காக வெளியூர்களில் இருந்து வியாபாரிகள் வந்து வைக்கோலை வாங்கி செல்வது வழக்கம். ஆனால் நடப்பாண்டு வைக்கோல் விற்பனை குறைந்து காணப்படுகிறது. வாங்குவதற்கு வியாபாரிகள் வராததால் திருமருகல், அண்ணாமண்டபம், குருவாடி, போலகம், தென்பிடாகை, திருப்புகலூர், திருச்செங்காட்டங்குடி, கொட்டாரக்குடி, காரையூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே வயல்களில் வைக்கோல் தேங்கிக் கிடக்கிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
Next Story



