சென்னை விமான நிலையத்தில் உயர் ரக கஞ்சா பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் உயர் ரக கஞ்சா பறிமுதல்
X
ரூ.7 கோடி மதிப்புடைய 6.9 கிலோ உயர் ரக பதப்படுத்தப்பட்ட கஞ்சா, சென்னை விமான நிலையத்தில் பறிமுதல், சென்னையைச் சேர்ந்த கடத்தல் ஆண் பயணி கைது
தாய்லாந்து நாட்டு தலைநகர் பாங்காக்கில் இருந்து, சென்னைக்கு விமானத்தில் கடத்திக் கொண்டு வரப்பட்ட ரூ.7 கோடி மதிப்புடைய 6.9 கிலோ உயர் ரக பதப்படுத்தப்பட்ட கஞ்சா, சென்னை விமான நிலையத்தில் பறிமுதல், சென்னையைச் சேர்ந்த கடத்தல் ஆண் பயணி கைது. சென்னை விமான நிலையத்தில் சோதனையின்போது, சுங்கத்துறை மோப்ப நாய், ஆண் பயணியின் உடமையை மோப்பம் பிடித்து, போதைப் பொருள் இருந்ததை கண்டுபிடித்துக் கொடுத்தது. தாய்லாந்து நாட்டுத் தலைநகர் பாங்காக்கில் இருந்து, சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு இன்று அதிகாலை, தனியார் பயணிகள் விமானம் ஒன்று வந்தது. அதில் வந்த பயணிகளை சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் கண்காணித்து வந்தனர். அப்போது சென்னையைச் சேர்ந்த சுமார் 30 வயது ஆண் பயணி ஒருவர், சுற்றுலா பயணி விசாவில் தாய்லாந்து நாட்டிற்கு, கடந்த இரு தினங்களுக்கு முன்பு சென்று விட்டு, இந்த விமானத்தில் திரும்பி வந்தார். அவர் மீது சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை நிறுத்தி விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பேசினார். இதை அடுத்து அவருடைய உடமைகளை, போதைப் பொருட்களை கண்டுபிடிக்கும் சுங்கத்துறையின் மோப்ப நாய் மூலம் சோதனை நடத்தினர். அப்போது மோப்பநாய், அவருடைய உடமையை முகர்ந்து பார்த்துவிட்டு, உடனடியாக அதே இடத்தில் தரையில் அமர்ந்து கால் நகங்களால், தரையை கீரி சைகை காட்டியது. அவ்வாறு சைகை காட்டினால், அந்த உடமைக்குள் தடை செய்யப்பட்ட பொருள் ஏதோ இருக்கிறது என்று அர்த்தம். உடனடியாக சுங்க அதிகாரிகள் அந்த பயணியின் உடமையை திறந்து பார்த்து பரிசோதித்தபோது, அதனுள் இருந்த 3 பார்சல்களில், பதப்படுத்தப்பட்ட, உயர்ரக கஞ்சா இருந்தது தெரிய வந்தது. மொத்தம் 6.9 கிலோ உயர்ரக கஞ்சா இருந்தது. அதன் சர்வதேச மதிப்பு ரூ.7 கோடி. உடனடியாக சுங்க அதிகாரிகள் கஞ்சாவை பறிமுதல் செய்து, கடத்தல் ஆசாமியை கைது செய்தனர். மேலும் அவரிடம் விசாரணை நடத்திய போது, இவரை இந்த கடத்தலுக்காக தாய்லாந்து நாட்டிற்கு அனுப்பி வைத்த ஆசாமி, சென்னை விமான நிலையத்திற்கு வந்து, கஞ்சாவை வாங்கிக் கொண்டு, இவருக்கு கடத்தல் வேலைக்காக கொடுக்க வேண்டிய அன்பளிப்பு பணத்தையும் கொடுத்து விடுவதாக கூறியிருந்தார். ஆனால் பயணி சுங்கத்துறையிடம் சிக்கிக் கொண்டார் என்று தெரிந்ததும், இவரை கஞ்சா கடத்தலுக்காக தாய்லாந்து நாட்டுக்கு அனுப்பி வைத்த, கடத்தல் ஆசாமி, தப்பி ஓடி தலைமறைவாகிவிட்டார். எனவே அவரை, சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் தேடி வருகின்றனர். தாய்லாந்து நாட்டில் இருந்து கடத்திவரப்பட்ட ரூ. 7 கோடி மதிப்புடைய உயர்ரக கஞ்சா போதை பொருள் சிக்கி உள்ள சம்பவம், சென்னை விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story