வயலில் மேய்ந்து கொண்டிருந்த ஆடுகளை கடித்துக் குதறிய நாய்கள்
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் பனங்குடி ஊராட்சியை சேர்ந்த விவசாயிகள் நேற்று வயலில் தங்களது ஆடுகளை மேய விட்டிருந்தனர். வெயிலின் உக்கிரம் அதிகமாக இருந்ததால் மதியம் வீட்டுக்கு வந்து விட்டனர். பின்னர், வயலுக்கு சென்று பார்த்த போது, ஆடுகளின் தலை மற்றும் உடல்களில் பலத்த காயம் ஏற்பட்டு, 8 ஆடுகள் இறந்து கிடந்தன. மேலும், 15-க்கும் மேற்பட்ட ஆடுகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் கீழே விழுந்து துடித்து கொண்டிருந்தன. அப்போது, அப்பகுதியில் உள்ள நாய்கள், ஆடுகளை கடித்து குதறியது தெரியவந்தது. இதுகுறித்து, அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் கூறுகையில், பனங்குடி ஊராட்சியில், வீடுகளில் உரிமம் இல்லாமல் நாய்களை வளர்ப்பவர்கள் அதற்கு அசைவ உணவுகளையே உணவாக தருகிறார்கள். அவ்வாறு சில சமயங்களில் அசைவ உணவு வழங்காத நேரத்தில், அந்த நாய்கள் இதுபோன்று வயலில் மேயும் ஆடுகளை கடித்து குதறி செல்கின்றன. வெயில், மழை என்று பாராமல் ஆடுகளை மேய்த்ததற்கு பலன் இல்லாமல் போய்விட்டது. இப்பிரச்சனை குறித்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
Next Story




