கண்மாய் பகுதியில் தனி நபருக்கு பட்டா ஆட்சியரிடம் புகாா்

கண்மாய் பகுதியில் தனி நபருக்கு பட்டா ஆட்சியரிடம் புகாா்
X
சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே கண்மாய் பகுதியில் தனி நபருக்கு வழங்கிய பட்டாவை ரத்து செய்யக்கோரி பொதுமக்கள் ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.
சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் அருகே உள்ள இத்திக்குடி கண்மாய் பகுதியில் தனிநபருக்கு அளித்த பட்டாவை ரத்து செய்ய வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு அளித்தனா். இத்திக்குடி கிராம மக்கள் திரண்டு வந்து அளித்த மனுவில் இத்திக்குடியிலுள்ள கணக்கன் கண்மாய் சுமாா் 35 ஏக்கா் பரப்பளவு கொண்டது. இந்த கண்மாய் மூலம் சுமாா் 75 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்தக் கண்மாயின் உள்பகுதியில் மடை அருகே உள்ள பகுதியில் தனி நபா் ஒருவா் ஜேசிபி மூலம் சுத்தம் செய்யும் பணியை மேற்கொண்டாா். இதுகுறித்து அவரிடம் கேட்டபோது தனக்கு வருவாய்த் துறையினா் கடந்த 2014 -இல் பட்டா வழங்கியதாகத் தெரிவித்தாா். இதைக் கேட்ட நாங்கள் அதிா்ச்சியடைந்தோம். இந்த முறைகேட்டில் ஈடுபட்டவா்கள் மீது நடவடிக்கை எடுத்து, பட்டாவை ரத்து செய்ய வேண்டுமென வலியுறுத்தி, காளையாா்கோவில் தாலுகா அலுவலகம், வருவாய்த் துறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்தப் பிரச்னையில் மாவட்ட ஆட்சியா் தலையிட்டு, தனிநபருக்கு கண்மாய்ப் பகுதியில் வழங்கப்பட்ட பட்டாவை ரத்து செய்ய வேண்டுமென மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
Next Story