பேராவூரணி பேரூராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் திடீர் சோதனை 

பேராவூரணி பேரூராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் திடீர் சோதனை 
X
சோதனை
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி பேரூராட்சி தலைவராக இருப்பவர் சாந்தி. இவரது கணவர் சேகர் திமுக நகர செயலாளர், மாமனார் செல்வராஜ் முன்னாள் மாவட்ட துணைச் செயலாளர்.  இந்நிலையில், பேராவூரணி பேரூராட்சி அலுவலகத்தில் அப்போதைய செயல் அலுவலர் பழனிவேல் என்பவர் துணையுடன் பலகோடி ரூபாய் ஊழல் முறைகேடு நடந்திருப்பதாக கூறப்படுகிறது.  இது தொடர்பாக பேராவூரணியைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் செந்தில்குமார் என்பவர் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இதனை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை இதுகுறித்து விசாரணை நடத்தி 6 வாரத்திற்குள் நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டது.  இந்நிலையில் சென்னை பேரூராட்சி இயக்குநரகம் சார்பில் உயர் அலுவலர்கள் ஆய்வு செய்து ஊழல் முறைகேடு  நடந்திருப்பதை உறுதி செய்தனர். இந்த நிலையில் செயல் அலுவலர் பழனிவேல் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.  நீதிமன்றம் 6 வார காலத்திற்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட நிலையில், இதுவரை அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த மாதம் அதிமுகவினர் சுமார் 3,000 அதிகமானோர் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  அப்போது பேசிய முன்னாள் அமைச்சர் காமராஜ் திமுக அரசு குற்றவாளிகளை காப்பாற்ற முயற்சிப்பதாக பகிரங்கமாக புகார் தெரிவித்தார். இந்நிலையில் பேராவூரணியைச் சேர்ந்த நீலகண்டன் என்பவர் ஊழல் முறைகேடு தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இது தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என நேற்று முன்தினம் புதன்கிழமை மதுரை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடுத்துள்ளார்.  இந்நிலையில் நேற்று வியாழக்கிழமை தஞ்சையில் இருந்து வந்த லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி அன்பரசன் தலைமையில் மூன்று பேர் கொண்ட குழு வழக்கு தொடுத்த நீலகண்டன் என்பவரிடம் சுமார் ஒரு மணி நேரம் விசாரணை நடத்தினர். அதனை தொடர்ந்து பேரூராட்சி அலுவலகத்தில் பதிவேடுகளை ஆய்வு செய்தனர். பின்னர் பாலம், சாலை அமைக்கப்படாமல் பணிகள் நடந்ததாக, மோசடியாக பணம் எடுக்கப்பட்டதால், அந்த இடத்தையும் நேரில் சென்று ஆய்வு செய்தனர். இதன் காரணமாக பேராவூரணி பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.
Next Story