பேராவூரணி அருகே விடுபட்ட விவசாயிகளின் பெயரையும் சேர்த்து பாசனதாரர் சங்க தேர்தலை நடத்த தஞ்சை ஆட்சியருக்கு விவசாயிகள் கோரிக்கை.

X
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே ஆதனூர் ஏரி மற்றும் வேம்பன்குளம் ஏரிகளின் பாசனதாரர் சங்க தேர்தலை விடுபட்ட விவசாயிகளின் பெயர்களையும் சேர்த்த பிறகு நடத்த வேண்டும் என தஞ்சை ஆட்சியருக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது. இது குறித்து பாசனதாரர் சங்க முன்னாள் தலைவர் வேத.குஞ்சருளன் விவசாயிகள் சார்பில் அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, "ஆதனூர் பெரிய ஏரி மற்றும் வேம்பன்குளம் நீரினை பயன்படுத்துவோர் சங்கத்தின் தலைவர்கள் மற்றும் ஆட்சி மண்டல தொகுதி உறுப்பினர்கள் பதவிகளுக்கு போட்டியிடும் வேட்பாளர்களிடமிருந்து வேட்பு மனுக்கள் பிப்ரவரி 7ஆம் தேதி பெறப்படும் என கடந்த 6 ஆம்தேதி திடீரென ஆதனூர் கடைத்தெருவில் தேர்தல் அட்டவணை ஒட்டப்பட்டது. பிப்ரவரி 19ஆம் தேதி வாக்கு பதிவு நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. வாக்காளர் பட்டியலை பொதுப்பணித்துறையினர் வெளியிடாமல் விவசாயிகளிடம் வேட்பு மனு தாக்கல் செய்ய அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். முதல் நாள் அறிவிப்பு வெளியிட்டு அடுத்த நாளே வேட்பு மனு தாக்கல் என அவசர அவசரமாக அறிவித்துள்ளனர். வாக்காளர் பட்டியலில் விவசாயிகளின் பெயர்கள் முறையாக இடம்பெறவில்லை . வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ள விவசாயிகள் மட்டுமே மனு தாக்கல் செய்துள்ளனர். வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாத விவசாயிகளின் பெயர்களையும் சேர்த்த பிறகு தேர்தலை நடத்தினால் மட்டுமே உண்மையான விவசாயிகள் பாசனதாரர் சங்கத் தேர்தலில் போட்டியிட முடியும் என்பதால் தேர்தலை தள்ளி வைக்க வேண்டும்" என மனுவில் கூறியுள்ளார்.
Next Story

