தேசிய கல்விக் கொள்கை ஏற்றுக்கொண்ட மாநிலங்களில் இழந்து வருகிறது தாய் மொழிகள் அமைச்சர் சா.சி.சிவசங்கர் பேட்டி

X
அரியலூர், பிப்.19- தேசிய கல்வி கொள்கையை ஏற்றுக்கொண்ட மாநிலங்களில், அங்கு தாய்மொழிகள் மெல்ல,மெல்ல இழந்து வருகிறது என்றார் போக்குவரத்து சா.சி.சிவசங்கர். அரியலூர் நகரில் அமைந்துள்ள மிகவும் பழமை வாய்ந்த கோதண்டராமசாமி கோயில் தேர் சீரமைக்க ரூ.18.5 லட்சமும், தேர் நிலை நிறுத்த கொட்டகை அமைக்க ரூ.22.5 லட்சம் நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பணிகளை திங்கள்கிழமை தொடக்கி வைத்த அமைச்சர் சிவசங்கர், பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: போக்குவரத்து தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை முதல் கட்டமாக முடிவடைந்துள்ளது. இன்னும் 15 நாள்களுக்கு பிறகு அடுத்த அமர்வுவில் பேச உள்ளோம். கல்வியின் அருமை பெருமைகளை தெரியாதவர்கள் தான் மத்திய அரசில் உள்ளனர். இருமொழி கொள்கையை அமல்படுத்தப்பட்ட ஒரே காரணத்தினால் தான் இன்று தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் கணினி உள்ளிட்ட பல்வேறு துறையில் உலக அளவில் மிக சிறப்பாக பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். எனவே, இருமொழி கொள்கைதான் மிகவும் உகந்தது. தமிழகத்தை பொருத்தமட்டில், தாய்மொழியாக தமிழையும், உலகளாவிய இணைப்பு மொழியாக ஆங்கிலமும் தற்போது கற்றுத் தரப்படுகிறது. இதுவே போதுமானது. தொடர்பு இல்லாத மற்றொரு மொழியை கற்றுத் தர வேண்டிய அவசியம் எழவில்லை. நம்முடைய தாய்மொழி பயில்வது ஒரு புறம். உலகத்தின் இணைப்பு மொழியாக ஆங்கில மொழியை பயில்வது ஒரு புறம். இதைத்தான் பேரறிஞர் அண்ணா அன்றைக்கே கொண்டு வந்தார். இன்று மும்மொழி கொள்கையை அறிவித்த மத்திய அமைச்சர், அவரது சொந்த மாநிலத்திலேயே தனது தாய் மொழியை இழந்து வருகிறார். மூன்றாவதாக ஒரு மொழியை நமக்கு தொடர்பில்லாத மொழியை திணிக்கும் பொழுது அந்த சுமையை மாணவர்களால் ஏற்க முடியாது. ஒருபுறம் வடஇந்தியாவை பொறுத்தவரையில் ஒரு மொழி கொள்கை தான் உள்ளது. அவர்கள் இந்தியை மட்டும் தான் கற்கின்றனர். நம்மீது மட்டும் தான் தாய் மொழியை இல்லாமல் மற்றொரு மொழியை திணிக்கின்றனர். இன்றைய காலகட்டத்தில் உலக அளவில் தொடர்புடைய ஆங்கிலம் தான் இணைப்பு மொழியாக உள்ளது. ஆங்கிலம் கற்பது போதுமானது. தேசிய கல்வி கொள்கை என சொல்கின்றவர்களின் மாநிலத்தில் அவர்களுடைய தாய் மொழியை மெல்ல மெல்ல இழந்து கொண்டிருக்கிறார்கள். தமிழகம் மற்றும் கேரளாவை பார்த்து அவர்கள் உணர வேண்டும். தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால் தான் கல்விக்கான நிதி ஒதுக்குவது போன்ற பல்வேறு நிதி சார்ந்த நெருக்கடிகளை தமிழக முதல்வர் சந்தித்து அதை திறமையாக கையாண்டு வருகிறார். இதனையும் முதல்வர் திறமையாக கையாளுவார் என்றார். நிகழ்ச்சியில், சட்டப் பேரவை உறுப்பினர்கள் அரியலூர் கு.சின்னப்பா, பெரம்பலூர் ம.பிரபாகரன், நகர் மன்றத் தலைவர் சாந்திகலைவாணன், திமுக நகரச் செயலர் முருகேசன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இளையராஜா, மாவட்ட அயலக அணி துணைத் தலைவர் எழில்மாறன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். படவிளக்கம்: அரியலூரில் கோதண்டராமசாமி கோயில் தேர் நிலை நிறுத்த கொட்டகை அமைக்கும் பணிக்கு திங்கள்கிழமை அடிக்கல் நாட்டிய போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர்.
Next Story

