மனைவியின் குடும்ப சொத்து விற்று பணத்தை பங்கு போடுவதில் தகறரு கத்தரிக்கோலில் சகலையை கொன்றவர் கைது

X
திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்து பெருமாநல்லூர் அருகே கணக்கம்பாளையம் அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் காஜாமைதீன் (40). திருப்பூரில் பனியன் கம்பனியில் டெய்லராக வேலை பார்த்து வரும் இவர், வீட்டிலேயே தையல் தொழில் செய்து வரும் தனது மனைவி சர்மிளாபானு (38) - வுடன் வசித்து வருகிறார். சர்மிளாபானுவின் தங்கையான யாஷ்மின் (36) தனது கணவரான வாஜித் (40) மற்றும் இரு குழந்தைகளுடன் அதே பகுதியில் வசித்து வருகிறார். இந்நிலையில், சர்மிளா பானு தனது தங்கையான யாஷ்மின் - ஐ ஜாமீன்தாரராக சேர்த்து தங்களது அம்மா பெயரில் உள்ள வீட்டு மனை இடத்தை அடமானம் வைத்து அதே வீட்டு மனை இடத்தில் வீடு கட்ட கடன் வாங்கியுள்ளார். கடனை திருப்பி செலுத்த முடியாததால் சகோதரிகள் இருவரும் தங்களது கணவரின் ஒத்துழைப்போடு இடத்தை விற்றுள்ளனர். இடம் விற்ற பணத்தில் பங்கு பிரிப்பதில் இருவர் குடும்பத்திற்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அடிக்கடி சண்டை வந்துள்ளது. இதையடுத்து, சண்டையின் ஒரு பகுதியாக சமரசம் செய்ய சர்மிளாபானு தனது கனவர் காஜாமைதீன் உடன் நேற்று முன்தினம் இரவு தங்கை யாஷ்மின் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு தங்கை யாஷ்மினின் கணவரான வாஜித் ற்கும் காஜாமைதீனுக்கும் இடையே வீட்டுக்கு முன்பு வீதியில் வைத்தே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த தங்கை யாஷ்மினின் கணவரான வாஜித் ஆவேசமாக வீட்டிற்குள் சென்று கத்தரிக்கோலை எடுத்து வந்து காஜா மைதீனை நெஞ்சுப் பகுதியில் சரமாரியாக குத்தியுள்ளார். நிலை தடுமாறிய காஜாமைதீன் கீழே விழுந்த நிலையில் ஆத்திரம் அடங்காத வாஜித், காஜாமைதீனின் மேல் அமர்ந்து தொடர்ந்து அவரது நெஞ்சுப் பகுதியில் கத்தரிக்கோலால் குத்தி கொலை செய்துள்ளார். அப்போது தடுக்க முயன்ற சர்மிளா பானுவையும் தொடை பகுதியில் கத்தரிக்கோலால் குத்தி காயம் ஏற்படுத்திவிட்டு, கத்தரிக்கோலை தனது பைக் டேங்க் கவரில் வைத்துக் கொண்டு பைக்கில் தப்பிச் சென்றுள்ளார். இது குறித்து சர்மிளா பானு கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த பெருமாநல்லூர் போலீசார் தப்பியோடிய வாஜித் - ஐ நேற்று இரவு கைது செய்து மேஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Next Story

