பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்பு விபத்தில் சிக்கும் பயணியர்

X
காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து, பல்வேறு வழித்தடங்களில் 300க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. தினமும் ஆயிரக்கணக்கான பயணியர், காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திற்கு வந்து செல்கின்றனர். பேருந்து நிலையத்திற்கு உள்ளே சென்றுவர இரு நுழைவாயில் உள்ளது. இதில், காமராஜர் வீதி, நுழைவாயில் பகுதி சாலையின் இருபுறமும், நடைபாதையை ஆக்கிரமித்து பழம், டீ, ஸ்வீட்ஸ், பூக்கடை, உணவகம் என, பல்வேறு கடைகள் வைத்துள்ளனர். இந்த ஆக்கிரமிப்பாளர்கள் நடைபாதை மட்டுமின்றி, சாலையையும் 4 அடிக்கும் மேல் ஆக்கிரமித்து கடைகள் வைத்துள்ளனர். இதனால், சாலையின் அகலம் வெகுவாக குறைந்துவிட்டதால், காலை - மாலையில் பள்ளி, அலுவலக நேரங்களில், வாகன போக்குவரத்துக்கும், பயணியர் நடந்து செல்வதற்கும் இடையூறு ஏற்படுகிறது. மேலும், நிலையத்தில் இருந்து பேருந்தை வெளியே எடுத்து வருவதற்கு ஓட்டுனர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இதனால், பயணியர் மட்டுமின்றி, சாலையை ஆக்கிரமித்து கடை வைத்துள்ள நடைபாதை வியாபாரிகளும் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே, காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் நடைபாதை மற்றும் சாலையை ஆக்கிரமித்து வைத்துள்ள கடைகளை அகற்றவும், மீண்டும் ஆக்கிரமிப்பு ஏற்படாமல் இருக்க மாநகராட்சியும், மாவட்ட போலீசாரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Next Story

