சேலத்தில் டாஸ்மாக் கடையை அகற்ற கோரி பொதுமக்கள் மறியல்

X
சேலம் அன்னதானப்பட்டி புட்டாமிசின் ரோட்டில் நேற்று காலை புதிதாக டாஸ்மாக் கடை ஒன்று திறக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாலையில் சங்ககிரி மெயின் ரோட்டில் பெண்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டவர்கள் திரண்டனர். பின்னர் அவர்கள் டாஸ்மாக் கடையை அகற்ற கோரி திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் கிடைத்ததும் அன்னதானப்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்களிடம், உயர் அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி இந்த டாஸ்மாக் கடையை இங்கிருந்து அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்று டாஸ்மாக் கடை முன்பு வந்தனர். அங்கு டாஸ்மாக் கடையை உடனடியாக மூட வேண்டும் என்று போராட்டம் நடத்தினர். அதைத்தொடர்ந்து டாஸ்மாக் கடை தற்காலிகமாக மூடப்பட்டது. பின்னர் பொதுமக்கள் அந்த இடத்தில் இருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து பொதுமக்கள் கூறும் போது, இந்த பகுதியில் டாஸ்மாக் கடை திறந்தால் பெண்கள் உள்பட அனைவரும் பாதிக்கப்படுவார்கள். எனவே டாஸ்மாக் கடையை இங்கு திறக்க கூடாது. மேலும் இந்த கடையை இங்கிருந்து அகற்றும் வரை எங்களது போராட்டம் தொடரும் என்றனர்.
Next Story

