சிறுவன் தற்கொலை கண்களை தானம் செய்த பெற்றோர் நெகிழ்ச்சி சம்பவம்

X
பெரம்பலூர் அருகே 14 வயது சிறுவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த துக்கத்திலும், சிறுவனின் கண்களை தானம் செய்த சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா நொச்சிக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் மருதமுத்து. இவரது மனைவி பார்வதி. இவர்களின் மகன் மகாதேவன். 14 வயதான சிறுவன் அங்குள்ள தனியார் பள்ளியில் 8 ம் வகுப்பு படித்து வந்தான். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலையில் பள்ளி முடிந்ததும் வீட்டுக்கு வந்த சிறுவன் மகாதேவன், அதே பகுதியில் நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அவனுக்கு வயிற்று வலி ஏற்பட்டதால் வீட்டில் உள்ள அறையில் சிறுவன் மகாதேவன் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான். இது குறித்து தகவல் அறிந்த குன்னம் போலீசார் விரைந்து சென்று சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலை செய்து கொண்ட சிறுவனின் உடலை பார்த்து அவனது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். போலீசார் விசாரணையில், மகாதேவனுக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பு வயிற்று வலி காரணமாக குடல்வால் அறுவை சிகிச்சை செய்ததாக என கூறப்படுகிறது. இதனால் அவ்வப்போது ஏற்பட்ட வயிற்று வலி தாங்கமுடியாமல், மனவேதனையில் இருந்த சிறுவன் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தனது மகனின் இரு கண்களை பெற்றோர் தானம் செய்ய முடிவு செய்தனர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, 2 கண்கள் தானமமாக வழங்கப்பட்டது, மகன் இறந்தாலும் அவரின் கண்கள் தானம் செய்த மருதமுத்து, பார்வதி தம்பதிகளின் செயலை அப்பகுதி பொதுமக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இறந்த பிறகும் தங்கள் மகன் இந்த உலகத்தில் உயிர் வாழ்வதாக மகாதேவன் பெற்றோர்கள் தெரிவித்தனர். சிறுவன் இறந்த அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Next Story

