பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகள் நாளை மூடப்படுகிறது

X
கன்னியாகுமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளில் இருந்து கடந்தாண்டு ஜூன் மாதம் ஒன்றாம் தேதி பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த அணைகள் பிப்ரவரி மாதம் 28-ம் தேதி (நாளை) மூடப்பட உள்ளது என்று அறிவிக்கப்பட்டது. அணைகள் மூடப்படும் தேதியை தள்ளி வைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். அதே வேளையில் கால்வாய்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள ஏதுவாக அணைகளை குறித்த காலத்தில் மூட வேண்டும். தொடர்ந்து கால்வாய்களில் பராமரிப்பு பணிகளை மார்ச் மாதத்திற்கு முடிக்க வேண்டும் என்று பாசன துறை வலியுறுத்தி இருந்தது. வழக்கம்போல் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் திருவிழாவுக்காக அந்தப் பகுதி கால்வாயில் மட்டும் பத்து நாட்கள் கூடுதலாக திறந்து விடப்படுகின்றது என அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. இந்த நிலையில் குமரி மாவட்டத்தில் பாசனத்திற்காக திறந்து விடப்பட்டிருந்த அணைகள் நாளை 28ஆம் தேதி மூடப்படுகிறது. மாவட்டத்தில் கோடைகாலம் தொடங்கியுள்ள நிலையில் தொடர்ந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருவதால் அணைகளில் நீர்மட்டம் சரிந்து விட்டது. பேச்சிபாறை, பெருஞ்சாணி அணைகளில் மட்டும் ஓரளவு தண்ணீர் இருப்பு உள்ளது.
Next Story

