மறியல் போராட்ட வழக்கு: நீதிமன்றத்தில் அமைச்சர் ஆஜர்

X
ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதாக தொடுக்கப்பட்ட வழக்கு தொடர்பாக தஞ்சாவூர் நீதிமன்றத்தில் உயர் கல்வித் துறை அமைச்சர் உள்ளிட்டோர் வியாழக்கிழமை ஆஜராகினர். தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டதற்கு எதிராக 2017 ஆம் ஆண்டில் பல்வேறு கட்டப் போராட்டங்கள் நடைபெற்றன. இதன் ஒரு பகுதியாக கும்பகோணம் ரயில் நிலையத்தில் 2017, டிசம்பர் 27 ஆம் தேதி நடைபெற்ற ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தற்போதைய உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன், மாநிலங்களவை உறுப்பினர் எஸ். கல்யாணசுந்தரம், கும்பகோணம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் சாக்கோட்டை க. அன்பழகன், கும்பகோணம் துணை மேயர் சு.ப. தமிழழகன் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும், தஞ்சாவூரிலுள்ள நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இது தொடர்பாக நீதிபதி எஸ். சுசீலா முன்னிலையில் வியாழக்கிழமை நடைபெற்ற விசாரணையில் அமைச்சர் கோவி.செழியன், கல்யாணசுந்தரம், அன்பழகன், தமிழழகன் உள்ளிட்டோர் ஆஜராகினர். பின்னர், இந்த வழக்கு விசாரணை மார்ச் 17 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
Next Story

