திருமருகல் ஒன்றியம் அம்பல் சட்டநாதர் கோயில் கும்பாபிஷேக விழா

X
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் அம்பல் கிராமத்தில், பிரசித்திப்பெற்ற அமுதவல்லி அம்பிகா சமேத ஆபத்தோத்தாரண சாமி, சட்டைநாதர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் கும்பாபிஷேகம் நடந்து, 12 ஆண்டுகளுக்கு மேல் ஆவதால், திருப்பணிகள் செய்து குடமுழுக்கு நடத்த அக்கிராமத்தினர், மருளாளிகள் உள்ளிட்டோர் முடிவு செய்து, திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இப்பணிகள் முடிந்து நேற்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, கடந்த 26-ம் தேதி தேவதா அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து, 27-ம் தேதி அஸ்த்ர ஹோமம், கும்பாலங்காரம், யாக பூஜை ஆரம்பம், மகா பூர்ணாஹூதி, தீபாராதனை உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றது. 28-ம் தேதி யாக பூஜைகள், மகா தீபாராதனையும், 1-ம் தேதி யாக பூஜைகள், அஷ்டபந்தனம், மருந்து சாத்துதல் மகா தேவாரதனை நடைபெற்றது. நேற்று அதிகாலை கோ பூஜை, கஜ பூஜை, யாக பூஜை, ரக்சாபந்தனம், தீபாராதனை உள்ளிட்டவைகள் நடைபெற்றது. தொடர்ந்து, காலை 10.30 மணிக்கு திருமுறை மல்லாரி வாத்தியங்களுடன் கடங்கள் புறப்பட்டு, 11 மணிக்கு விமான கும்பாபிஷேகமும், மூலவர் கும்பாபிஷேகமும் நடைபெற்றது. தொடர்ந்து, சுவாமிக்கு அபிஷேகமும், மகா தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இரவு சுவாமிகள் வீதியுலா நடைபெற்றது. இதில், திருப்புகலூர் வேளாக்குறிச்சி ஆதீனம் சத்தியஞான மகாதேவ தேசிக பரமாச்சாரியார் சாமிகள் கலந்து கொண்டு பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். விழாவில், சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை, அம்பல் திருப்பணி குழுவினர், மருளாளிகள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.
Next Story

